நேற்று சென்னையில் நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தில் ‘நந்தினி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டார்.
அவர் மேடையில் பேசும்போது, “எல்லோருக்கும் வணக்கம்” என்று தமிழிலில் பேச ஆரம்பித்தார். பின்பு, “நான் இங்கு வந்ததில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய குரு மணிரத்னம் சார். அவர், எனக்கு எப்போதுமே குருவாகவே இருப்பார். இந்த வாய்ப்பளித்த அவருக்கு நன்றி. இப்படம் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் சிறப்புரிமையை கொடுத்திருக்கிறது. ஒட்டு மொத்த படக் குழுவின் கனவும் இன்று நனவாயிருக்கிறது. இப்படம் சினிமாவிற்கு ஒரு மாயாஜால உலகமாக இருக்கும்.
மணிரத்னம் சார் மிகவும் திறமைசாலி. லைகா புரொடக்ஷன்ஸ், ரவிவர்மன் சார், ஏ.ஆர்.ரகுமான் சார், மற்றும் இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், மேக்கப் கலைஞர்கள் மற்றும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி.
ஜெயராம் சார், பார்த்திபன் சார், சரத் சார், பிரபு சார், தோட்டா தரணி சார், ஶ்ரீகர் பிரசாந்த், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா மற்றும் இப்படத்தில் அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத நிகழ்வு.
தனது துணையை என் குரு மணிரத்னம் சாருக்கு மௌனமாக தந்து வரும் சுஹாசினி மேடத்திற்கு நன்றி. ஆகையால்தான் மணிரத்னம் சார் எப்போதும் வெற்றியடைந்து வருகிறார்.
கமல் சார், ரஜினி சார் இருவருக்கும் இங்கு வந்ததற்கு நன்றி. ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கமல் சாருடன் இன்னும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காகக் காத்திருக்கிறேன்..” என்றார்.