White Carpet Films நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் K.விஜய்பாண்டி தயாரித்துள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’.
காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் சதீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமண்ய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் – K.விஜய் பாண்டி, எழுத்து, இயக்கம் – வெங்கி, ஒளிப்பதிவு – யுவ கார்த்திக், இசை – வி.பி.ஆர்., எடிட்டர் – அருள் E.சித்தார்த், கலை இயக்கம் – G துரை ராஜ், சண்டைப் பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்(AIM).
ஒரு கொள்ளையும், அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடித் திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி.
இப்படம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி திரைக்கு வரவுள்ளதால், இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு திரைப்படக் குழுவினர் கலந்து கொள்ள… பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டி பேசும்போது, “எங்களின் இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். என் முதல் படம் தேஜாவு. அதற்கு நல்ல ஆதரவு தந்தீர்கள். அதே போல் இந்த படத்திற்கும் நல்ல ஆதரவு தாருங்கள்.. நன்றி..” என்றார்.
நடிகர் சதீஷ் பேசும்போது, “என் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக் கொண்டு படம் பார்த்ததற்கு நன்றி. தளபதி விஜய் சார்தான் இந்தப் படத்தை துவக்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ பார்த்ததாகச் சொன்னார். அவர் பாராட்டியது மிகப் பெரிய சந்தோஷம்.
இயக்குநர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். ‘V’ செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் ‘V’தான். இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன்.
ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். ஆனந்தராஜ் சாரை எல்லாம் சின்ன வயதில் பார்த்து பயந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல், டயலாக்கை மக்கப் பண்ணி அத்தனை அர்ப்பணிப்புடன் நடித்தார், அவருக்கு வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தை நல்லதொரு முயற்சியாக செய்துள்ளோம். எங்களை நம்பிய தயாரிப்பாளருக்கு நன்றி. தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி..” என்றார்.
இயக்குநர் வெங்கி பேசும்போது, “இந்தக் கதையை வைத்துக் கொண்டு, நிறைய தயாரிப்பாளரிடம் அலைந்திருக்கிறேன். ஆனால் தயாரிப்பாளர் விஜய் சாரிடம் கதை சொன்ன உடனே ஓகே சொல்லி விட்டார். அவருக்கு நன்றி.
தயாரிப்பாளர் நான் கேட்ட அனைத்தையும் தந்தார். படம் பார்த்தால் உங்களுக்கு தெரியும். சதீஷ் பல காலமாக நண்பர். இதில் ஹீரோவாகிவிட்டார். இந்தக் கதையை சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. உடனே ஒத்துக் கொண்டார்.
நண்பன் யுவாவுடன் ‘மாஸ்டர்’ படத்தில் வேலை செய்தேன். “இந்தப் படம் செய்கிறேன்” என்றேன். உடனேயே என்னுடன் வந்துவிட்டார். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ஐடியா தந்ததிலிருந்து நிறையப் பங்கெடுத்த நண்பன் கார்த்திக்கு நன்றி.
சிம்ரன் குப்தா என் படத்தின் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாக இருந்தார். அவருக்கு சுத்தமாக தமிழே தெரியாது. ஆனால், டயலாக்கை தயார் செய்து கொண்டு மிக அர்ப்பணிப்போடு செய்தார். நடித்த அனைவரும் நன்றாக செய்துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இந்த படத்தில் நிறையப் புதுமுகங்கள் வேலை செய்துள்ளனர். அனைவருக்கும் என் நன்றிகள். என் டைரக்சன் டீமிலிருந்த 10 பேரும் என் கோபத்தைப் பொறுத்துக் கொண்டு வேலை செய்தனர். அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். நன்றி..” என்றார்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “இங்கு வந்து பேசிய அனைவரும் நன்றியுணர்வுடன் பேசினார்கள். அனைவருக்கும் நன்றி. இயக்குநர் வெங்கி நல்ல நண்பர். திருடர்கள் கதை சமூகத்திற்கே அவசியமான கதையாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் கடவுளுக்கே பூட்டு போட வைத்து விடுகிறார்கள்.
வெங்கி நல்லதொரு திருடர்கள் கதையாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். சினிமாவுக்கு புதிதாக வருகிறவர்கள்தான் சினிமாவை மாற்றுகிறார்கள், அதேபோல் விஜய் பாண்டி நல்ல படங்களைத் தர வேண்டும்.
டான்ஸ், பாட்டு எல்லாம் தெரிந்த நம்ம சதீஷ் ஹீரோவாக வருவது மகிழ்ச்சி. ஒரு நல்ல படத்தைப் படக் குழு தந்துள்ளார்கள். “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” எனும் குறள் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.. நன்றி..” என்றார்.
நடிகை சிம்ரன் குப்தா பேசும்போது, “தயாரிப்பாளர் விஜய் சார், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு நன்றி. இந்த வித்தைக்காரன் எனக்கு முக்கியமான படம். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு தந்த சதீஷ்க்கு நன்றி. வித்தைக்காரன் கண்டிப்பாகச் சிறந்த வெற்றி படமாக இருக்கும்; நன்றி..” என்றார்.