விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘வித்தையடி நானுனக்கு’ திரைப்படம் எல்-9 மற்றும் ஐ.எஸ்.ஆர். வென்சர்ஸ் நிறுவனங்களின் பெருமைமிகு கூட்டுத் தயாரிப்பாகும்.
இந்தப் படத்தின் சிறப்பே படத்தில் இரு கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருப்பதுதான். ராமநாதன் K.B. இயக்கியிருக்கும் இதுவொரு சைக்கோ த்ரில்லர் படமாகும்.
சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஸ்ரீ’ என்ற படம் நினைவிருக்கிறதா..? அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா…’ பாடல் மிகப் பிரபலமானது நினைவிருக்கலாம்.. அந்தப் படத்திற்கு டி.எஸ். முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது ‘ராமநாதன் K.B.’ என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, படத்தில் நடித்திருக்கும் இரண்டு கதாபாத்திரங்களில் இவரும் ஒருவர். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார். எல்-9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் பேனரில் லோகநாதன் D – ஐ.எஸ்.ஆர். செல்வகுமார் தயாரித்துள்ளனர்.
நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான் இந்த ‘வித்தையடி நானுனக்கு’ திரைப்படம்.
படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனத் தொடங்கும் அற்புதமான பாடல் மட்டுமே இருக்கிறது. இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளார் இசையமைப்பாளர் விவேக் நாராயண்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.









