‘வில் அம்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன், “இந்த மேடை, எனக்கு முதல் மேடை போல் உள்ளது, ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவுக்கு எனக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போதும்கூட ‘வெண்ணிலா கபடி குழு’ மேடையில் நிறப்பது போல் உள்ளது. இந்த ‘வில் அம்பு’ படம் எங்கள் பதினான்கு வருட நட்பின் சாட்சி..” என்றார்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, “இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக நிரூபித்துவிட்டு, தற்போது ஒரு ஆல மரமாக இருந்து பல விழுதுகளை உருவாக்கி வருகிறார். அவர் நட்புக்கு செய்யும் செயல் மிகப் பெரியது. ஆற்றல் மிகுந்த தன் நண்பர்களுக்கு வெளிச்சம் தந்து கொண்டு இருக்கிறார்.
இப்போது தமிழ் சினிமாவில் அழுக்கை அழகாக காட்டி வருகிறார்கள். இது நிச்சயம் பாராட்ட தக்க ஒரு விஷயம். எனக்கு அழுக்கை அழகாக காட்டும் இந்த விஷயம் மிகவும் பிடித்துள்ளது. இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெரும்…” என்றார்.
நடிகர் சூரி பேசும்போது, “நான் சுசீந்திரன் அண்ணாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தவன். நான் மட்டுமல்ல.. விஷ்ணு உள்ளிட்ட பலர் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலமாக வந்தவர்கள்தான். இப்போது அண்ணன் தயாரித்துள்ள ‘வில் அம்பு’ படத்தில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத், டி.இமான் ஆகியோர் பாடியுள்ளனர். வெற்றி இசையமைப்பாளர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி இருப்பதே படத்துக்கும், பாடலுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்..” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “படத்தில் நான் எழுதிய பாடல் ‘குறும் படமே உயிர்க்கிறாய்’. இந்த பாடலின் நடக்கும் சூழலை இயக்குநர் ரமேஷ் சொல்லும்போது, ‘இது குறும் படம் எடுக்கும் நாயகன் பாடும் பாடலாக அமைய வேண்டும்’ என்று கேட்டார். உடனேயே இந்த பாடல் குறும் படமும் அதை சார்ந்த விஷயமும் இருக்கும் வகையில் உருவாக்கினேன். பாடல் நன்றாக வந்துள்ளது…” என்றார்.
படத்தை பற்றி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்போது, “இங்கே மேடையில் எங்களை வில் போன்ற வடிவில் மிகவும் க்ரியேட்டிவ்வாக அமர வைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் நந்தா குமார் வெற்றி பெற வேண்டும்…” என்றார்.
படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், “இந்த படத்தின் இசையமைப்பாளர் நவீனின் பாடல்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த படம் வெற்றி பெற அவர் முக்கிய காரணமாக இருப்பார். இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி..” என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, “சுசீந்திரன்தான் என்னை முதன்முதலில் ‘பாண்டிய நாடு’ படத்தில் நடிக்க வைத்தார். அவர் மிக சிறந்த இயக்குநர் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஜி.வி.பிரகாஷ் உடன் நானும் அமர்ந்திருப்பதால், நானும் அவரை போல் ஒரு வெர்ஜின் பாய்தான் என்பதை நிரூபிக்க முடிகிறது.
இப்போது பாடல்களை லிப் அசைக்காமல் எடுக்கிறார்கள். அது எனக்கு தவறாக தோன்றுகிறது. லிப் அசைவோடு எடுக்கும்போதுதான் ஒரு நடிகனின் நடிப்பும் வெளிவரும்…” என்றார்.













