சென்னையின் இன்று காலை காலமான தனது ஆரூயிர் நண்பரும் சினிமா தயாரிப்பாளருமான அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் உடலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜயகாந்த்.
விஜயகாந்தின் சிறு வயதில் இருந்தே நண்பராக இருந்த இப்ராஹிம் விஜயகாந்தின் வளர்ச்சிக்காகவே தன்னை ஒப்புவித்துக் கொண்டவர். விஜயகாந்தின் கல்யாணத்திற்குப் பிறகுதான் தனக்கு கல்யாணம் என்று சொல்லி வந்தவர், ஏனோ அதன் பின்பும் திருமணம் செய்யாமலேயே விட்டுவிட்டார்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் ராவுத்தரிடமிருந்து விஜயகாந்த் விலகியிருந்தாலும் உள்ளுக்குள் ராவுத்தர் மீது பாசமாகவே இருந்தார்.
விஜயகாந்த்துக்கு கேப்டன் என்ற பட்டத்தையும் வழங்கி, அவரது இப்போதைய வளமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டவர் இப்ராஹிம் ராவுத்தர் என்பதை விஜயகாந்த் குடும்பத்தினரால் மறுக்கவே முடியாது.. மறக்கவும் முடியாது.
உயிர் நண்பன் காலமான செய்தி கிடைத்தவுடன் தனது குடும்பத்தினருடன் ஓடோடி வந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க ராவுத்தருக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளிடம ராவுத்தர் தன்னை எப்படியெல்லாம் கவலைப்படாத அளவுக்கு தாய் போல கவனித்துக் கொண்டதை சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டார்.
அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் உடல் நாளை பகல் 12.30 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.