full screen background image

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தான் ஆரம்பித்துள்ளதாக சென்ற ஆண்டு திடீரென்று எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இதனை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார்.

உடனேயே இந்த மக்கள் இயக்கத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், இந்த அமைப்பில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டார் நடிகர் விஜய்.

கூடவே இந்த இயக்கத்தில் நிர்வாகிகளாக இருந்த தனது அப்பா, அம்மா மற்றும் சிலர் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் விஜய்.

தனது பெயரை பயன்படுத்தி பொதுக் கூட்டங்களை நடத்த தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர் உள்பட விஜய் மக்கள் இயக்கத்தினருக்குத் தடை விதிக்ககவும் அந்த மனுவில் கோரியிருந்தார் விஜய்.

விஜய்யின் மனுவிற்கு பதில் அளிக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

ஆகவே, அப்பாவின் கனவு நிராசையாகிவிட்டது எனலாம்..!

Our Score