இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் – த்ரிஷா – ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மிலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுப்ரீம் சுந்தர் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் (ஆடைகள்), சுப்ரமணியன் நாராயணன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), ஜே. கிரிநாதன் & கே ஜெயசீலன் (தயாரிப்பு நிர்வாகி), ஜி ஆனந்த் குமார் (ஸ்டில்ஸ்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைனர்), ஹரிஹரசுதன் (விஎஃப்எக்ஸ்), சுரேஷ் சந்திரா (பத்திரிக்கை தொடர்பு), மற்றும் ஜி.கே.எம்.தமிழ் குமரன் (லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் படம் BREAK DOWN(பிரேக் டவுன்) என்ற ஹாலிவுட் படத்தின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ளது. முறைப்படி அனுமதி வாங்கி இந்தப் படம் உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம் இதுவரையிலும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
அர்ஜுன் என்ற அஜித்தும் கயல் என்ற திரிஷாவும் காதலித்து திருமணம் செய்த தம்பதிகள். அஜர்பைஜானில் வசிக்கிறார்கள். 12 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்கின்ற ஒரு பிரச்சினையினால், இருவருக்கும் இடையில் தற்பொழுது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இருவரும் இப்போது விவாகரத்து செய்து கொள்ளலாம் என்கின்ற மன நிலைக்கு வந்து விட்டார்கள். இந்த நிலையில் அஜித் தன்னுடைய காரில் திரிஷாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய மாமியார் வீட்டுக்கு கிளம்புகிறார்.
வழியில் ஒரு இடத்தில் ஆர்வா தன்னுடைய காரில் இடிப்பது போல் வர ஒரு நிமிடம் தப்பிப் பிழைக்கிறார்கள் அஜித்தும், த்ரிஷாவும். அந்த நேரத்தில் அஜித்துக்கு, ஆர்வா மீது ஒரு கோப உணர்வு உண்டாகிறது.
இதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்பொழுது அஜீத்துக்கும், ஆர்வாவுக்கும் இடையில் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து செல்கிறார்கள்.
அதே பெட்ரோல் பங்கில் இருக்கும் கடையில் திரிஷா, தீபிகா என்ற ரெஜிரானாவையும், அர்ஜுனையும் சந்திக்கிறார். ரெஜினாவும், அர்ஜுனும் கணவன் மனைவி. அர்ஜுன் ஒரு டிரக் வைத்து தொழில் செய்து வருவதாக சொல்கிறார்.
அதன் பின்பு அஜித், திரிஷா மறுபடியும் காரில் பயணிக்கும் போது கார் ஒரு இடத்தில் ரிப்பேர் ஆகிவிடுகிறது. அந்த இடத்திற்கு பின்னால் வரும் ரெஜினா, திரிஷாவை மட்டும் அழைத்துக் கொண்டு செல்கிறார். 12 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு ஹோட்டலில் திரிஷாவை இறக்கி விட்டுச் செல்வதாக அஜித்துக்கு வாக்குறுதி அளிக்கிறார் ரெஜினா.
அஜித் தன் காரை சரி செய்து விட்டு மறுபடியும் அவர்கள் சொன்ன அந்த ஜாபர் கஃபேக்கு சென்று த்ரிஷாவைத் தேடுகிறார். த்ரிஷா இங்கு வரவே இல்லை என்று அவர்கள் சாதிக்கிறார்கள். பயங்கர குழப்பத்தில் தவிக்கும் அஜித் த்ரிஷாவைத் தேடி அலைகிறார்.
இப்படி அலைகின்ற பொழுது அர்ஜுன் ஒட்டி சென்ற டிரக் அவர் கண்ணில் பட… தேடிப் பிடித்து அர்ஜுனிடம் “என் மனைவி எங்கே…” என்று கேட்கிறார். ஆனால் அர்ஜூனோ “நீங்க யார்?” என்று திருப்பி கேட்டு ஷாக் அடிக்க வைக்கிறார். அர்ஜுன் இதுவரையில் அஜித்தை சந்தித்தது இல்லை என்று சொல்ல அவர் பெரும் அதிர்ச்சியாகிறார்.
நடுவில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ட்ரக்கை சோதித்துப் பார்த்துவிட்டு, திரிஷா இல்லாததால் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுக்கும்படி சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அஜித் அங்கேயும் புகார் கொடுக்க “விசாரிக்கிறோம். வெயிட் பண்ணுங்க” என்கிறார்கள்.
த்ரிஷாவைத் தேடி அலைகின்ற அஜீத் மறுபடியும் அந்த கஃபேக்கு வந்து தேடுகிறார். அங்கே இருக்கும் ஒருவன் ஒரு வழியை காட்ட அவன் சொன்ன இடத்திற்கு ஓடி வந்து பார்க்கிறார். ஆனால் அங்கே ஆரவ்வும் அவருடைய குழுவினரும் அஜித்தை சராசரியாக தாக்கி “த்ரிஷாவை நாங்கள்தான் கடத்தி வைத்திருக்கிறோம்..” என்கிறார்கள்.
இதன் பின்பு என்ன நடந்தது? அஜித் தன் மனைவியை மீட்டாரா? இவர்களை எதற்காக கடத்தி வைக்கிறார்கள்? என்பதெல்லாம் இந்தப் படத்தின் இடைவேளைக்கு பின்பு வரும் திரைக்கதை.
அஜித்தின் மேஜிக்கல் வித்தையை காட்டுகின்ற அளவுக்கு மிக அழுத்தமான காட்சிகளும், திரைக்கதையும் அந்த படத்தில் இல்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். இடைவேளைக்கு பின்புதான் அவருடைய ஹீரோயிஸத்தை காட்டக் கூடிய சூழல் வருகிறது.
படத்தில் முதல் அரை மணி நேரத்திற்கு பின்புதான் கதையின் மெயின் பாயிண்ட்டுக்கே வருகிறார்கள். ஆனாலும் அஜித் அந்த வயதுக்குரிய நடிப்பினை அழகாக காட்டியிருக்கிறார். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பான யூத்தான அஜித், படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகிறார்.
மனைவி இனிமேல் கர்ப்பம் தரிக்க முடியாது என்ற உண்மையைக் கேட்டு அவர் கதறி அழுவதெல்லாம் ரொம்பவே ஓவர். இந்த காட்சியை எப்படி இயக்குநர் வடிவமைத்தார் என்று தெரியவில்லை.
ஆனால் அதற்கு பின்பு மனைவியை கூல் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அவர் போக்கிலேயே விட்டுவிடுவதுதான் நல்லது என்று நினைத்து தாங்கி தாங்கி பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் எல்லாம் இப்போதைய இளைஞர்களுக்கு ஓகேயாகத்தான் இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது பிடிக்குமா என்று தெரியவில்லை.
இடைவேளைக்கு பின்பு மனைவியை தேடி அலைகின்ற காட்சிகளிலும், இன்ஸ்பெக்டரிடம் தன் மனைவியை இவர்தான் கடத்தி வைத்திருக்கிறான் என்று புரிய வைக்கின்ற நேரத்தில் அவர் படுகின்ற கோவம், தவிப்பு, தத்தளிப்பில் தன்னுடைய மிகச் சிறந்த ஒரு நடிப்பினை அஜித் காட்டியிருக்கிறார். அதில் சந்தேகம் இல்லை.
ஆனால் சண்டைக் காட்சிகளில் மட்டும் சண்டை இயக்குநர் வேகத்தை கொஞ்சம் குறைவாகவே வைத்துவிட்டதால், அஜீத்தின் ஸ்பெஷலான ஸ்பீடு கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
தென்னிந்திய சினிமாவின் குவீன் திரிஷா இதிலும் அப்படியேதான் இருக்கிறார். அதே அழகு. அதே ரம்யம். அதே தோற்றம். பார்த்தாலே அனைவருக்கும் பிடித்ததுபோல் இருக்கிறார். படத்தில் இவருக்கு அதிகமாக நடிப்பும் இல்லை. எப்போதும் போலவே வசனங்களைப் பேசிவிட்டு போயிருக்கிறார்.
கொஞ்சம் அசத்தலாக நடித்திருப்பது ரெஜினாதான். மிகப் பெரிய வில்லி கதாபாத்திரத்தை மிக அழகாக செய்து இருக்கிறார். அதிலும் அஜித்திடம் தான் யார் என்பதை அவர் சொல்லும் காட்சியிலும், திரிஷாவின் கேரக்டரை சிதைப்பதுபோல கதைக் கட்டி பேசும் இடத்திலும் தன் நடிப்பால் கவர்கிறார் ரெஜினா.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு பக்கம் ஆக்ஷனில் மட்டுமே தன் வீரத்தையும், துடிப்பையும் காட்டுயிருக்கிறார். ஆனால் நடிப்பு என்று பார்க்கப் போனால் வில்லத்தனமான நடிப்பு என்பதால் நம்மால் அதிகமாக ரசிக்க முடியவில்லை.
மற்றபடி படத்தில் நடித்த அஜர்பைஜுனை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கும் நமது பாராட்டுக்கள். அதிலும் குறிப்பாக ஜாபர் கபே ஓனராக நடித்தவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரே ஒரு காட்சியில் அஜித்துடன் நெருக்கமாக நடித்து பல இளைஞிகளின் கோபத்தை சம்பாதித்து இருக்கிறார் ரம்யா.
படத்தின் மிகப் பெரிய பலமே படத்தில் ஒளிப்பதிவுதான். அற்புதமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். அஜர்பைஜான் நாட்டின் சுற்றுப்புறங்களை, இயற்கை எழில் வாய்ந்த இடங்கள், சாலைகளையெல்லாம் அவ்வளவு அழகாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஒரு சின்ன சிறிய காருக்குள் நடக்கின்ற அந்த சண்டை காட்சியை படமாக்கியவிதம் அருமை. அஜித் அண்ட் திரிஷா இருவரின் அழகையும் காட்டுவது போல குளோசப் காட்சிகளிலும், லட்டு, லட்டான கேமரா கோணங்களிலும் அவர்களை அழகாக காட்டி அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
பாடல் இசையைவிட பின்னணி இசை சூப்பர் என்று சொல்லலாம். அதிலும் அஜித்தின் ஆக்சன் காட்சிகள் வரும்போதெல்லாம் பின்னணி இசை ஹிப் ஏற்றி விட்டிருக்கிறது.
சண்டைக் காட்சிகள் ஏனோ இந்த படத்தில் அவ்வளவு ஃபோர்ஸாக இல்லை என்பது உண்மை. அஜித்துக்கு வயதாகி விட்டது என்று நினைத்து சரியாக படம் எடுக்காமல் விட்டார்களோ என்னவோ தெரியவில்லை… இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம்.
படத் தொகுப்பாளர் தன்னுடைய ஒட்டு மொத்த உழைப்பையும் கொட்டி கச்சிதமாக நறுக்கி கொடுத்திருப்பதால், இறுதி சண்டை காட்சியை மட்டும் ரசிப்பதுபோல படமாக்கி இருக்கிறார்கள்.
மொத்தமாக பார்க்கப் போனால் இந்தப் படம் அஜித் படம் போலில்லை. வேறு ஒரு நடிகர் நடித்திருந்தாலும் இந்தப் படத்தின் கதை எடுபடாதுதான்.
ஆனால் அஜித்திற்கு எதற்கு இந்த கதை? எதற்காக அஜர்பைஜான்? இதை இங்கே தமிழ்நாட்டில், கேரளாவில் எடுத்திருக்கலாமே? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது.
தமிழில் எடுக்கப்பட வேண்டிய கதைகள் எவ்வளவோ இருக்கும் நிலையில் இப்படியொரு ஹாலிவுட் கதையை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிப் படமாக்கியது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வி..!
இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய முந்தைய நான்கு படங்களிலும் இயக்கத்தை மிக சிறப்பாக செய்திருந்தார். இந்தப் படத்தில் அதை செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் அதற்கான கதைக் களமும், நடிகர்களும் அவருக்கு வாய்க்கவில்லை என்பதுதான் உண்மை.
அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களின் கதை மிக எளிய ரசிகனின் மனதை தொடுவதுபோல இருந்தால்தான் அந்த ரசிகர் படத்துடன் கனெக்ட் ஆக முடியும். ஆனால் அந்த விஷயம் இந்தப் படத்தில் இல்லாதது துரதிஷ்டவசமானது.
சூப்பர் ஹிட் படமாக இருந்திருக்க வேண்டிய திரைப்படம். ஜஸ்ட் மிஸ்ஸாக ஒரு முறை பார்க்கலாம் என்கின்ற வகையில் அமைந்துவிட்டது நமது துரதிருஷ்டம்தான்!
RATING : 3.5/5