‘மக்கள் பாசறை’ சார்பில் உருவாக இருக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ .ஆர்.கே. நாயகனாக நடிக்கும் படம் இது. பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே., ஷாஜி கைலாஷ் இணையும் மூன்றாவது படம் இது. இதில் நீத்து சந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா, சுஜா வாருணி, கோமல் ஷர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்கவிழா இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோவில் பழைய பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. தொடர்ந்து படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
நடிகர் ஆர்.கே. பேசும்போது “நானும் ஷாஜி கைலாஷும் இணையும் 3 வது படம் இது. ‘நீங்களே எத்தனை படம் தொடர்ந்து செய்வீர்கள்?’ என்கிறார்கள். நல்லவர்களுடன் இணைந்திருப்பது நல்லதுதான். டைரக்டர் இந்தக் கதை பற்றிக் கூறும்போது ‘இது எல்லாம் அவன் செயல் படத்தைப் போல 10 மடங்கு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்றார்.
அப்போதுதான் நான் நினைத்தேன். நாம் விரும்புகிறவரைவிட நம்மை விரும்புகிறவரை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல காதலுக்கு நல்லது. அதுபோல்தான் சினிமாவுக்கும். எனவே இந்தப் படக் கதை எனக்காக உருவானதால் ஏற்றுக் கொண்டேன்.
இது நிச்சயமாக தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதை. முழுக் கதையும் சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் நடக்கிறது. மூன்றே மாதத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இன்று தொடங்கி விட்டோம்…” என்றார்.
நடிகர் நாசர் பேசும்போது ”ஆர்.கே. எப்போதும் பரபரப்பாக இருப்பவர். அவருக்கேற்ற பரபரப்பான கதை இது. அவர் படத்தில் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன்.
படத்தின் கதையை வசனகர்த்தா பிரபாகர் ஒரு மணி நேரம் என்னிடம் சொன்னார். சொல்லி முடித்தபோது பத்து நிமிடத்தில் சொன்ன மாதிரி இருந்தது. அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது. இது அனைவருக்கும் பிடித்த த்ரில்லராக இருக்கும்…” என்றார்.
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசும்போது ” ஆர்.கே. என்னைக் கூப்பிட்டு மூன்றே வரிகளில் ‘அய்யா இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா..?’ என்றார். உடனே ஒப்புக் கொண்டேன். இந்த மூன்று வரிகூட அதிகம்தான். ஒரே வரியில் அவர் சொல்லியிருந்தால்கூட நிச்சயமாக நான் இதை ஒத்துக் கொண்டிருப்பேன். ஒரு குழுவில் இணைந்து, தொடர்ந்து பணியாற்றலாம். நல்லவர்களோடு தொடர்ந்து இணைவதில் தவறில்லை. ஆர்.கே. யாரும் செய்யாத வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். ‘புலி வேஷம்’ படத்தில் என்னை வில்லனாக்கியவர் அவர்தான்…” என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா, “சினிமாவில் கதை சொல்லும் போது ரயிலை வைத்து காட்சி ஆரம்பமாகிறது என்றாலே அதை பஸ்ஸாக மாற்றுங்கள் என்பார்கள். ரயிலை வைத்து எடுப்பது என்றால் டெபாசிட் 15 லட்சம் கட்ட வேண்டும். அதுவும் திரும்பி வராது. அனுமதி வாங்குவது சிரமம். இப்படி பல கஷ்டங்கள். இப்படி இருக்கும்போது முழுப் படமும் ரயிலில் எடுப்பது என்றால் இவர்களின் தைரியத்தைப் பாராட்ட வேண்டும். டைரக்டருடன் கேமராமேன் சஞ்சீவ் சங்கர், இசையமைப்பாளர் தமன், வசனகர்த்தா பிரபாகர் இப்படி பல திறமைசாலிகள் இதில் இணைந்து இருக்கிறார்கள்…” என்றார்.
நடிகர் சிங்கமுத்து பேசும்போது, ”நடிகர்கள் மீது இவர்களுக்கு ரொம்பவே அக்கறை. வெயில் படாமலேயே முழுப் படத்தையுமே ரயிலில் எடுக்கிறார்கள். இதில் என்னை மாதிரி, பாஸ்கர் மாதிரி பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். இருந்தாலும் இங்கேயிருக்கும் இந்த 3 ஹீரோயின்களுக்காச்சும் படத்துல நடிக்கணும்னு நினைச்சிருக்கேன். இந்த 3 பேருமே அவ்ளோ அழகு..” என்றார்.
இயக்குநர் ஷாஜி கைலாஷ் பேசும்போது, “இது பலர் இணைந்திருக்கும் படம். படக் குழுவினர் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்..” என்றார்.
நடிகை சுஜா வாருணி பேசும்போது, “ஷாஜி கைலாஷ் சாரின் மலையாளப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். தமிழ்ப் படத்திலேயே வாய்ப்பு கிடைத்து விட்டது. ஆர்.கே. சாருக்கும் ஷாஜி சாருக்கும் நன்றி” என்றார்.
நடிகை கோமல் சர்மா பேசும்போது, ”இன்று பிரதோஷம். நாளை சிவராத்திரி. நல்ல நாளில் தொடங்குகிறது இப்படம். வாழ்த்துக்கள்..” என்றார்.
வசனகர்த்தா பிரபாகர் பேசும்போது, “போக்கிரி’க்குப் பிறகு பிற மொழிகளுக்குப் போய் விட்டேன். ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து அடையாளம் கொடுத்தார்கள். ஷாஜி சார் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகிய நட்சத்திரங்களை வைத்து இயக்கிய ஸ்டார் டைரக்டர்.
அவரை ‘வாஞ்சிநாதன்’ படத்தில் விஜயகாந்த் படப்பிடிப்பில் முதலில் சந்தித்தேன். இப்போது கேப்டனின் இடத்தை நோக்கிய பயணமாக ஆர்.கே.யை அவர் உருவாக்கி வருவதாக நினைக்கிறேன்…” என்றார்.
நடிகை நீது சந்திரா பேசும்போது, “பத்து வருடங்களுக்கு முன் ஷாஜி சார் ‘விஷ்ணு’ என்கிற தெலுங்குப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். பிறகு இப்போது இதில் நடிக்கிறேன். அருமையான கதை எனக்குப் பெயர் சொல்லும்படியான வாய்ப்பு…” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடர்ந்து நடைபெறுகிறது.
















