full screen background image

‘நூறாவது நாள்’ திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது..!

‘நூறாவது நாள்’ திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது..!

ரீமேக் பட வரிசையில் அடுத்து இடம் பெறும் படம் ‘நூறாவது நாள்’. 1984-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம்தான் சத்யராஜுக்கு ஒரு மிகப் பெரிய இடத்தை தமிழ்த் திரையுலகில் பிடித்துக் கொடுத்த்து.

விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் மணிவண்ணன். சீரியல் கொலை, திரில்லர் கதையில் பரபரப்பான திரைக்கதையை அமைத்து ரசிகர்களை கிளைமாக்ஸில் சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டார் மணிவண்ணன். இளையராஜாவின் இசையும் படத்திற்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்தது.

இந்தப் படத்தை தற்போது ‘ரீபூட்’ முறையில் மீண்டும் தயாரிக்கப் போவதாக மணிவண்ணனின் மகனும் நடிகருமான ரகு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பிரபலமாகி வெற்றி பெற்ற ஒரு படத்தை மீண்டும் எடுக்கும் போது ‘ரீமேக்’ செய்வார்கள். அதாவது அதே கதையை வேறு நடிகர்களை வைத்து சில  மாற்றங்களுடன் மீண்டும் எடுக்கப்படுவது  ரீமேக்.

‘சீக்வெல்’ எனப்படுவது அதே கதையின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது.

‘ரீபூட்’ என்பது அதே மையக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு கதைப் போக்கு, திரைக்கதை, காட்சிகள், நடிகர்கள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் காலத்துக்கேற்ப மாற்றி உருவாக்குவது.

ஹாலிவுட்டில் ‘ஹல்க்’, ‘சூப்பர்மேன்’, பேட்மேன்’, ‘ஸ்பைடர் மேன்’ ‘டெர்மினேட்டர்’ போன்ற பல படங்கள் ரீபூட் முறையில் உருவாகி வெற்றி பெற்றுள்ளன. இன்றும் தொடர்கின்றன. தமிழில் அப்படி உருவாகும் முதல் படம் ‘நூறாவது நாள்.’

படத்தை இயக்கும் ரகு மணிவண்ணன் இது பற்றி கூறுகையில், “அப்பா இயக்கிய படங்களில் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘நூறாவது நாள்’. பரபரப்பாக பேசப்பட்ட படமும்கூட. இதை ரீபூட் முறையில் எடுக்க முன்பே முயன்றேன்.

அப்பா, அம்மாவின் திடீர்  மறைவு என்னை மிகவும் பாதித்தது. எனவே ஒரு வருடம் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். மனம் அமைதியடைந்தது. அங்கு சிலரைச் சந்தித்தேன் நண்பர்களுடன் பேசினேன். பலரும் என் முயற்சிக்கு ஊக்கம் தந்தார்கள். ஆக்சன் படத்தை ரீமேக் செய்பலாம்.. ஆனால் த்ரில்லரை அப்படி எடுக்க முடியாது.

இங்கே வந்த பிறகு அதைப் பற்றி பல விவாதங்கள் போனது. அதே கதையை வைத்து ஒரு படத்தை மறுபடியும் அப்படியே எடுப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் கதை எல்லாருக்கும் தெரிந்து விட்டதால் எதிர்பார்ப்பும் இருக்காது. தெரிந்த விஷயமாக இருப்பதில் என்ன த்ரில் இருக்கப் போகிறது..? எனவேதான் இப்படி எடுக்க முடிவு செய்தேன்.

கதை, காட்சிகள் திரைக்கதை எல்லாவற்றையும் முழுக்க முழுக்க மாற்றி வேறு ஒரு திசையில் விறுவிறுப்புடன்  செல்லும்படி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம். 

நாயகனாக ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கிறார். திரைக்கதை வேலைகள் முடிந்து விட்டாலும் திரைக்கதையை செதுக்குவது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதில் திருப்தி வரும்வரை படப்பிடிப்புக்கு செல்ல மாட்டோம்.

கதை உருவாக்கத்தில் எனக்கு சிபிராஜ், யு.கே. செந்தில்குமார் ஆகியோரும் உதவியிருக்கிறார்கள். படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்..” என்றார் ரகு மணிவண்ணன்.

‘நூறாவது நாள்’ புது வடிவத்துக்கு இசை நிரோ பிரபா, இவர் லண்டனில் இருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் மாணவர். ஒளிப்பதிவு : யுகே செந்தில்குமார். தயாரிப்பு : ஏடிஎம். புரொடக்ஷன்ஸ். கதை: மணிவண்ணன். திரைக்கதை வசனம் இயக்கம் : ரகு மணிவண்ணன். 

‘சதுரங்கவேட்டை’  நாயகனும் பிரபல ஒளிப்பதிவாளருமான  நட்ராஜ் இப்போது விஜய் நடிக்கும் ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். மார்ச்சில் அந்தப் படம் முடிந்துவிடும். எனவே  ‘நூறாவது நாள்’ படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பமாக இருக்கிறது.

தமிழில் இதுவரை செய்யப்படாத புதிய முயற்சியாக ரீபூட் ஆகிறது. எந்த புதிய அனுபவத்துக்கும் ரசிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். 

எடுத்த ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு வகையிலான படமாக எடுத்தவர் மணிவண்ணன். இப்போது அவரது மகன் இயக்க வருகிறார். அப்பா பெயரைக் காப்பாற்றிட வாழ்த்துக்கள்!

எல்லாஞ் சரி.. இதே ‘நூறாவது நாள்’ என்ற பெயரில் வேறொரு படம் தயாராகி வருகிறதே..? அதுக்கென்ன செய்வீங்க..? 

Our Score