full screen background image

‘உத்தமவில்லனு’க்கே கடன் தொல்லை..!

‘உத்தமவில்லனு’க்கே கடன் தொல்லை..!

‘உத்தமவில்லன்’ படத்துக்காக பெறப்பட்ட கடன் தொகை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அந்த படத்தை தயாரித்துக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது. 

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தங்கராஜிடம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் ‘உத்தமவில்லன்’ படம் தயாரிக்க 2 கோடி ரூபாயை கடனாக வாங்கினார்களாம் தயாரிப்பாளர்கள். அதை திருப்பித் தராத்தால் தனக்குக் கடனை செட்டில் செய்துவிட்டுத்தான் உத்தமவில்லன் படத்தை திரையிட வேண்டும் என்று கோரி தங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

தங்கராஜ் தாக்கல் செய்த மனுவில் “நான் ‘தங்கம் சினிமாஸ்’ என்ற நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளேன். ‘திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக என்.லிங்குசாமியும், என்.சுபாஷ் சந்திரபோசும் உள்ளனர். இவர்கள், நடிகர் கமல்ஹாசன், நடிகை பூஜாகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘உத்தமவில்லன்’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். 

இந்த படத்தைத் தயாரிக்க என்னிடம் இருந்து 2 கோடியை கடனாக லிங்குசாமியும், சுபாஷ் சந்திரபோசும் வாங்கினார்கள். அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், என்னிடம் வாங்கிய கடன் தொகைக்கு ஆண்டுக்கு 12 சதவீத வட்டியும், படம் வெளியிடுவதற்கு முன்பு வட்டியுடன் முழு கடன் தொகையும் திருப்பித் தர வேண்டும் என்றும், படத்தின் மீதான காப்புரிமையையும், படத்தை செங்கல்பட்டு பகுதியின் விநியோக உரிமையும் எனக்கு தரவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி, இந்த படத்தை வெளியிடும் உரிமையை வேறு ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்க திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் தற்போது முடிவு செய்துள்ளனர். மேலும், எனக்கு தர வேண்டிய 2 கோடி மற்றும் அதன் வட்டித் தொகையை தராமல், ‘உத்தமவில்லன்’ படத்தை வருகிற மே 1-ந் தேதி வெளியிட உள்ளனர். எனவே, எனக்கு தர வேண்டிய 2 கோடியையும், வட்டித் தொகை 22 லட்சமுத்தையும் சேர்ந்து 2 கோடியே 22 லட்சம் ரூபாயை வழங்கும்படி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்குசாமி சார்பில் ஆஜரான வக்கீல் எம்.என்.ஜோசப், “மனுதாரருக்கு தர வேண்டிய தொகை படம் வெளியாவதற்கு முன்பு நிச்சயம் வழங்கப்படும்..” என்று கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் மனுதாரருக்கு தரவேண்டிய கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் கொடுத்து விட்டு, அது தொடர்பாக அறிக்கையை இந்த ஐகோட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Our Score