வையம் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் ‘உரு’.
இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
தயாரிப்பு – வையம் மீடியாஸ், தயாரிப்பாளர் – V.P.விஜி, எழுத்து, இயக்கம் – விக்கி ஆனந்த், ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார், இசை – ஜோஹன், படத் தொகுப்பு – சான் லோகேஷ், பாடல்கள் – மதன் கார்க்கி, தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ஆனந்த கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – C.N.குமார்.
இப்படம் பற்றி இயக்குநர் விக்கி ஆனந்த் பேசும்போது, “உரு என்றால் ‘பயம்’ என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு ‘உரு’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக் கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சமூகச் சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவெடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார்.
அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும்போது அவரைச் சுற்றி சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் பரபரப்பான் திகில் கதை. பேய்ப் படம்தான் என்றாலும் பேய் இல்லாத திகில் படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், மேகமலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. அங்கே பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் படப்பிடிப்பை நடத்தினோம். சில சமயங்களில் காட்டெருமை கூட்டத்துக்கு பயந்து, நாங்கள் ஓடி ஒளிந்த வித்தியாசமான அனுபவமும் எங்களுக்கு ஏற்பட்டது.
படப்பிடிப்பு நடந்தது டிசம்பர் மாதம் என்பதால் 4 டிகிரி குளிரில் மழைக் காட்சியில் கலையரசனும், தன்க்ஷிகாவும் மிகவும் சிரமப்பட்டு நடித்தனர்.
இத்தனை கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ள இந்த ‘உரு’ படம் வரும் மே மாதம் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.