Trending entertainment & White horse studios நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர் K.சசிகுமார் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியது.
மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், ஜான் விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
‘கோடியில் ஒருவன்’, ‘குரங்கு பொம்மை’ படப் புகழ் ஒளிப்பதிவாளர் N.S.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘அசுரன்’, ‘விடுதலை’ படப் புகழ் V.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். ‘நாய் சேகர்’, ‘விலங்கு’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் அஜீஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘யானை’, ‘சினம்’ படப் புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார்.
வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, இயக்குநர்கள் P.வாசு, தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சகோ கணேசன் இயக்குகிறார்.
“ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும்” எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை, ஹைபர் லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.