தனித்துவமான கதைக் களங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த தலைப்பிடப்படாத படத்தை, ‘பாஸ் மூவீஸ்’ சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கிறார்.
நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் துவங்கியது. தொடர்ந்து 21 நாட்கள் இங்கு படப்பிடிப்பை நடத்த படக் குழு முடிவு செய்திருக்கிறது.
இது பற்றி பேசிய இயக்குநர் வினோத், “தற்போது நாங்கள் காஷ்மீரில் உள்ள குல்மார்க் மற்றும் பால்காம் பகுதிகளில், எங்கள் படத்தின் சில முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகின்றோம்.
கடுமையான பனி பொழிவின் காரணமாக இங்கு எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் எங்கள் படக்குழுவினரின் முழு ஒத்துழைப்பால் நாங்கள் படப்பிடிப்பை திட்டமிட்டது போல சரியாக நடத்தி வருகின்றோம்.
இந்த முதல்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து நாங்கள் எங்களின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த உள்ளோம்..” என்றார்.