“எனக்குக் கொலை மிரட்டல் விட்டார்..” என்று ஹீரோயின் சுஜிபாலாவும், “அவர் சொல்வதெல்லாம் பொய். அவர்தான் என்னுடைய சொத்துக்களையெல்லாம் சுரண்டிவிட்டார்…” என்று ஹீரோ கம் தயாரிப்பாளர் கம் இயக்குநரான ரவிக்குமாரும் இணைந்து ஜோடியாக நடித்த ‘உண்மை’ படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நேற்று இரவு ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஹீரோயின் சுஜிபாலா வரவில்லை..
இந்தப் படத்தின் ஹீரோ கம் இயக்குநரான ரவிக்குமார் ‘சவாடியா’ என்னும் இந்திப் படம் உள்ளிட்ட 3 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.
தான் இயக்கும் முதல் படம், தமிழ் படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதர் கிரின்லேண்ட் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ‘உண்மை’ என்ற இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.
இதில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுஜிபாலா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், சிங்கம் புலி, வாசு விக்ரம், மீனாட்சி தேசாய், பாண்டு, வையாபுரி, சிந்து, அன்வர் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவரை கவர்ச்சி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷகிலா, இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.
இந்த நாட்டில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு முன்னால் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கின்றனர். பின்னர் ஆடம்பர வாழ்க்கைக்காக கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு செய்யும் ஊழலை வெளிப்படுத்துவதுதான் படத்தின் கதையாம்.
ஹீரோயின் சுஜிபாலாவுக்கு பதிலாக படத்தில் நடித்த ஷர்மிளா, ஷகிலா, ஷர்மிலி மூவரும் வந்திருந்தனர்.
ஷகிலா பேசும்போது “நான் எப்போதும் கவர்ச்சியாத்தான் நடிச்சிரு்ககேன். அப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் எனக்கு வரும். ஆனா இந்த படத்துல ஒரு டான் கேரக்டர்ல நடிக்கணும்னு கூப்பிட்டாரு ரவி ஸார். நான் முதல்ல தயங்கினேன். நான் எப்படி ஸார்..? எனக்கு சூட்டாகுமான்னு கே்டடேன். நிச்சயம் சூட்டாகும்.. நீங்கதான் பண்ணணும்னு கம்ப்பெல் பண்ணி நடிக்க வைச்சார்..
ஷாட் எடுக்கும்போது எப்படி நான் எப்படி நடக்கணும்.. நடிக்கணும்னு அவரே சொல்லிக் கொடுப்பாரு.. கொஞ்சம் கஷ்டமா இருந்தா நீங்களே நடிச்சுக் காண்பிங்கன்னு கேட்டு அவர் நடிச்சதை பார்த்து அப்படியே நடிப்பேன்..
இதுவரைக்கும் என் லைப்ல இப்படியொரு கேரக்டர் செஞ்சதில்லை.. உங்களுக்கும் இதுவொரு வித்தியாசமான அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன்..” என்றார்.
நடிகை ஷர்மிளா பேசும்போது, “கல்யாணமாகி பையன் பிறந்த பின்னாடி இப்பத்தான் முதல் முறையா நான் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக இந்தப் படத்துக்காகத்தான் போனேன்.. படத்துல சின்ன வயசு ரவிக்குமாருக்கு அம்மாவா நான் நடிச்சிருக்கேன்.. நல்ல கேரக்டர்..” என்றார்.
படத்தின் ஹீரோ ரவிக்குமார் பேசும்போது, “உண்மையை ஊரறியச் சொல்லணும்ன்றதுதான் இந்தப் படத்தோட கரு. நாட்டுல இப்போ நடந்துக்கிட்டிருக்கிற பல ஊழல்களை செய்யும் அரசியல்வாதிகளால மக்கள் ரொம்ப வெறுப்புல இருக்காங்க. அது மாதிரியான சிலவைகளை இந்தப் படத்துல வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கேன்..” என்றார்.
விழாவின்போது திடீரென்று மேடையில் ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார். முதலில் சட்டென அடையாளம் தெரியாமல் பின்பு உற்று கவனித்த பின்புதான் தெரிந்தது அது முன்னாள் கவர்ச்சி நடிகை ஷர்மிலியென்று..!
இத்தனை குண்டாகியிருப்பதால்தான் படங்களில் நடிக்காமலும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் சொன்னார் ஷர்மிலி..!











