full screen background image

“நடிகர்கள் எதற்கு கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்..?” – திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி..!

“நடிகர்கள் எதற்கு கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்..?” – திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி..!

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.அன்புச் செழியனின் தயாரிப்பில் விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மருது’ படம், வரும் மே 20-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

vishal

இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஷால், “24’ படத்திற்கான திருட்டு டிவிடி உடனுக்குடன் வெளியாகிவிட்டது. அந்த்த் திருட்டு டிவிடி தமிழ்நாட்டில் உள்ள ஒரு திரையரங்கில்தான் தயாராகியுள்ளது. அதனை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். இது குறித்து அனைத்து திரைப்பட சங்கங்களிலும் புகார் கொடுத்தும், இதுவரையில் பலனில்லை. யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் ‘மருது’ படத்துக்கும் திருட்டு டிவிடி வெளியானால் நான் களத்தில் இறங்கி போராடுவேன்..”   என்று கோபமாகப் பேசினார்.

விஷாலின் இந்தப் பேச்சு குறித்து பிரபல விநியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பேச்சை வெளியிட்டிருக்கிறார். அதில் விஷால் உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் சராமரியாக தாக்கிப் பேசியிருக்கிறார்.  

“திருட்டு டிவிடி பற்றி விஷால் பேசியதைக் கேட்டேன். என்னமோ திருட்டு டிவிடியை தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் மட்டுமே எடுப்பது போல பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி கிடையாது.

தொடர்ச்சியாக 200 படங்களுக்கான திருட்டு டிவிடிக்கள் வெளியாகின்றன என்றால், அதில் 5 முதல் 10 படங்கள் மட்டுமே தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சின்ன திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்.

அதுகூட அந்தத் திரையரங்க முதலாளியால் எடுக்கப்பட்டது கிடையாது. சின்ன திரையரங்குகளில் ஒரு நாளைக்கு  2000 ரூபாய் வருமானம் கூட வராது. ஆகையால் அந்த திரையரங்கில் 3 அல்லது 4 ஆட்கள்தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் நள்ளிரவு 2 மணிக்கு வேலை முடிந்து சென்றவுடன் வாட்ச்மேன் அல்லது ஆப்ரேட்டர்தான் தியேட்டரில் படுத்து தூங்குவார். அந்த நேரத்தில் அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டுதான் இந்த வேலை நடக்கிறது.

இதைத் தடுப்பதற்கு இனிமேல் அதிகாலை 2 மணி முதல் 9 மணிவரை க்யூப் சிஸ்டத்தை லாக் பண்ணி வைக்கும்படி க்யூப் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து திரையரங்குகளுமே இதற்கு தயாராக இருக்கிறோம்.

ஏதோவொரு சின்ன திரையரங்கில் நடப்பதை நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நடப்பது போல பேசுகிறீர்கள். எல்லாத் துறைகளிலும் இருப்பது போல, இரண்டு, மூன்று சதவிகித ஆட்கள் தப்பானவர்களாக  இங்கும் இருக்கலாம். அவர்களை தண்டிப்பதற்கு நாங்களே தயாராக இருக்கிறோம்.

ஒரு படத்தின் திருட்டு டிவிடி எங்கு எடுக்கப்பட்டது என்று கண்டறிய 54000 ரூபாய் செலவாகும் என்கிறீர்கள். வருடத்திற்கு 200 படங்கள் வெளியாகிறது என்றால் மொத்தம் ஒரு கோடி ரூபாய் ஆகிறது. அனைத்து சங்கங்களும் ஆளுக்கு 20 லட்சம் போடலாம். திரையரங்கு உரிமையாளர் சங்கமும் 20 லட்சம் கொடுக்கத் தயார். எந்தப் படத்தின் டிவிடி வந்தாலும் நாம் போய் சோதனை செய்யலாம்.  யாரோ இரண்டு திரையரங்க உரிமையாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக, ஒட்டு மொத்த திரையரங்க உரிமையாளர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லாதீர்கள்.

உங்கள் படம் வரும்போது மட்டுமே திருட்டு டிவிடி பற்றிப் பேசுகிறீர்கள். முக்கியமான பெரிய படங்களின் டிவிடிக்கள் வெளிநாட்டில் இருந்துதான் வருகின்றன என்பதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும். நான் அடித்துச் சொல்கிறேன்..  அந்த 200 படங்களில் 190 படங்கள்வரை வெளிநாட்டில் இருந்துதான் வந்திருக்கும். ஆனால் நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில்தான் திருட்டு டிவிடி தயாரிக்கப்படுகிறது என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். 

தற்போது முழுக்க டிஜிட்டல் மயம் என்பதால் திருட்டு டிவிடியை எங்கு எடுத்தாலும் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட திரையரங்கிற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இணைந்து ஆறு மாதத்திற்கு படம் கொடுக்க வேண்டாம் என சொல்வோம்.  இரண்டாவது முறையும் அந்த திரையரங்கம், திருட்டு டிவிடி குற்றத்தில் பிடிபட்டால் அந்த திரையரங்கிற்கு படம் கொடுப்பதையே நிறுத்துவோம். திரையரங்கை மூட வலியுறுத்துவோம். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் அப்படியெல்லாம் தொழில் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.

நீங்கள் வெளிநாட்டு உரிமை விற்கும்போது மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்து விடுகிறீர்கள். எல்லா உரிமையையும் கொடுத்து விடுகிறீர்கள். ஒவ்வொரு நாயகனும் வெளிநாட்டு உரிமையை தாங்களே வாங்கிக் கொண்டு படத்தை இரண்டு வாரங்கள் கழித்து வெளிநாட்டில் வெளியிடலாமே? தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கும்போது வெளிநாட்டு உரிமைக்கும் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டு வாங்கிக் கொள்ளுங்களேன்.

முன்பு நீலகிரி மாவட்டத்தில் 38 திரையரங்குகள் இருந்தன, தற்போது மொத்த மாவட்டத்திற்கும் சேர்த்து, ஊட்டியில் மட்டுமே வெறும் 2 திரையரங்குகள்தான் இருக்கின்றன. தெரியுமா உங்களுக்கு.? ஒரு மாவட்டத்தில் இருந்த 36 திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? தியேட்டரை மூடினால் ஊருக்குள் பேசுவார்கள்.. மரியாதை வேண்டும் என்பதற்காக இப்போதும் பலர் வேறு வழியில்லாமல் திரையரங்குகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் சங்கத்தில் ஒரு நடவடிக்கைகூட எடுத்து விடாதீர்கள்..?!

சின்ன திரையரங்குகளுக்கு என்ன வருமானம் பண்ணிக் கொடுக்கிறீர்கள்..? பெரிய நாயகர்கள் படம் வந்தால் அதிகமான விலை கேட்கிறீர்கள்.  பெரிய நடிகர்களின் படம் போடும் போது 300 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் என நீங்களே சொல்கிறீர்கள். சென்னை திரையரங்குகளில், எத்தனை திரையரங்குகளில் நீங்கள் முன் பணம் வாங்கி படத்தைத் திரையிடுகிறீர்கள்..?

அதே போல கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் யாராவது இதைப் பற்றிச் சொன்னால் எங்களது வருமானமே போச்சு என்கிறீர்கள். மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வருமானத்தில் 50%, 40%, 30% வேண்டும் என்பார்கள். அப்போதெல்லாம் எங்கே போனீர்கள் நடிகர்களெல்லாம்..? சிறு திரையரங்கம் என்றால் 80% கொடு, 5 லட்சம் அட்வான்ஸ் கொடு என்று கேட்டு அவனைப் போட்டு சாகடிப்பீர்கள்.

கடந்த வாரம் நடிகர் டெல்லி கணேஷ் ஒரு ஆடியோவில் பேசியிருந்தார். தியேட்டர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.  முதலில் ஏன் உங்கள் பையனை நேரடி நாயகனாக்கினீர்கள்..? ரஜினி சார், கமல் சார் போல சிறு, சிறு வேடங்களில் நடிக்க வைத்துவிட்டு, அதன் பின்பு உங்கள் மகனை நாயகனாக்கியிருக்கலாமே..? கொஞ்சம், கொஞ்சமாக முன்னிறுத்தி பண்ணியிருக்கலாமே..? எடுத்தவுடனேயே விஜய் மாதிரி நேரடி நாயகன் என்று வந்து விடுகிறீர்கள்.

விஜய்யை நாயகனாக்க அவங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா? கிட்டத்தட்ட 8 முதல் 10 படங்கள் சொந்த காசு போட்டு பண்ணினார். இயக்குநர்கள், நடிகர்கள் அவர்களின் மகன்கள் அனைவருமே நேராக நாயகன்தான் என்கிறீர்கள்.

படம் நன்றாக இருந்தால் ஓட்டுவதற்கு அனைவருமே தயாராக இருக்கிறார்கள். இறுதிச் சுற்று எங்கள் மல்ட்டிப்ளக்ஸில் இரண்டு ஷோ மட்டுமே போட்டோம். நன்றாக போனதால் 12 ஷோவாக எல்லா ஸ்கிரீனுக்கும் மாற்றினோம். நன்றாக இருந்து, ஜனங்கள் பார்த்தால் யார், என்ன, என்பதெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை.

எந்த திரையரங்க உரிமையாளர் ஒடுகிற படத்துக்கு திரையரங்கம் தரமாட்டேன் என்று சொல்லுவார்..? மக்கள் சிறிய படங்களைப் பார்க்க வருவதில்லை. அனைத்து நடிகர்களும்தான் வர விடாமல் பண்ணிவிட்டீர்கள். ஏனென்றால் ஒரு பெரிய படத்திலேயே அவன் பையில் இருக்கும் மொத்த காசையும் பிடுங்கி விடுகிறீர்கள். பின்பு எப்படி சிறிய படத்திற்கு அவன் வருவான்..? டிக்கெட் விலையை 100-க்கு மேல் விற்கக் கூடாது.. விற்றால் ரசிகர்கள் எங்களிடம் சொல்லுங்கள் என நடிகர் சங்கம் சொல்ல வேண்டியதுதானே..?

அரசாங்கத்திடம் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யுங்கள். அனைத்து ஏரியாக்களுக்கும் சதவீத அடிப்படையில் படங்கள் தருகிறோம் என்று சொல்லுங்களேன். கார்ப்பரெட் கம்பெனிகளுக்கு 50% கொடுக்கும் நீங்கள் அதேபோல் சிறு திரையரங்குகளுக்கும் கொடுங்களேன்.. அந்த சிறு திரையரங்கில் கண் விழித்துப் படம் ஓடியதால்தான் இன்று நீங்கள் சொகுசாக வாழ்கிறீர்கள்.

நடிகர்கள் 5 கோடி, 10 கோடி, 30 கோடி, 40 கோடி என்று சம்பளம் வாங்க வேண்டாம். லாபத்தைப் பொறுத்து சம்பளம் வாங்கலாம் என்று நடிகர் சங்கத்தில் இருந்து அறிவிக்க வேண்டியதானே..? அதைவிடுத்து 20 கோடி, 30 கோடி கொடு என்று தயாரிப்பாளரை நச்சரிப்பது ஏன்..?

‘அதையும் மொத்தமாகக் கொடு’, ‘படப்பிடிப்பில் கேரவன் கொடு’ என்று கேட்கிறீர்கள். ஹீரோ, ஹீரோயின், காமெடியன் என்று அனைவருமே ஆளுக்கொரு கேரவன் வாங்கிக் கொள்கிறீர்கள்..  ஏன் வெயிலில் நின்றால் கறுத்துப் போய் விடுவீர்களா..? நாங்களும் வெயிலில் நின்றுதான் தொழில் பண்ணுகிறோம்.

ஒரு படத்துக்கு சக்சஸ் மீட் என்று தயாரிப்பாளர் பணத்தில் 10 லட்சம், 20 லட்சம் என செலவு வைக்கிறீர்கள். உண்மையில் ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களுக்குத்தான் சக்சஸ் மீட் வைக்க வேண்டும். ஏனென்றால், வாங்கியதைவிட 3 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது அந்தப் படம்தான்.

எதற்கெடுத்தாலும் விநியோகஸ்தர்கள் மீதும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும் குறை சொல்லாதீர்கள். வெளிநாட்டில் பட வெளியீட்டை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் எந்த திரையரங்கில் இருந்து திருட்டு டிவிடி வருகிறது என்று நாங்களும் பார்க்கிறோம். திருட்டு டிவிடிக்கு துணை போய் தொழில் பண்ண வேண்டும் என்ற அவசியமில்லை எங்களுக்கு இல்லை.

இப்போது டிவி உரிமையும் விற்பதில்லை. அதே போல வெளிநாட்டு உரிமையை விற்காமல்  2 வாரங்கள் கழித்து விற்கலாமே..? விற்றுப் பாருங்கள் அப்புறம் எப்படி திருட்டு டிவிடி வருகிறது என்று பார்க்கலாம்..?” என்று காட்டமாகப் பேசியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.

Our Score