நர மாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் ‘ட்ரிப்’.
பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தை Sai Film Studios சார்பில் தயாரிப்பாளர்கள் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், V.J.சித்து, V.J.ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா, அதுல்யா சந்திரா, லஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
‘ட்ரிப்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் இயக்குநரான டென்னிஸ் மஞ்சுநாத் பேசும்போது, “இயக்குநர் சாம் ஆண்டனின் ‘100’ படத்தில் பணியாற்றியபோது நடிகர் யோகிபாபுவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது. ‘ஒரு நல்ல திரைக்கதையுடன் வா. படம் செய்வோம்..’ என அப்போதே என்னிடம் கூறியிருந்தார்.
தயாரிப்பாளர்கள் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இருவரும் என் மீது மிகப் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மிகவும் நேர்த்தியான அதே நேரம் ரசிகர்கள் கொண்டாடும்படியான கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்க நினைத்தேன்.
தமிழ் சினிமா ஏற்கனவே ‘ஜாம்பி’களை கொண்டு படமெடுத்து விட்டது எனவே நான் கொஞ்சம் வித்தியாசமாக நர மாமிச குழுவை மையப்படுத்தி படமெடுக்க நினைத்தேன். இந்த வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் புகழ் பெற்றவை. ஆனால், அங்கு ஹாரரும் திரில்லும் கலந்தே எடுப்பார்கள். ஆனால், நான் அதில் ஹியூமரை இணைத்து உருவாக்கினேன். இந்த வகை படம் தமிழ் திரையுலகிற்கு முற்றிலும் புதிதானது.
ப்ரியா மிகச் சிறந்த நடிகை. இப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு வரும். திரைக்கதை எழுதும்போதே கல்லூரி தினேஷ் எனது மனதில் இருந்தார். நான்சி ஜெனிஃபர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் திரைக்கு வந்திருக்கிறார். R.J.சித்து அவரது நகைச்சுவைக்காக அதிகம் கொண்டாடப்பட்டிருக்கிறார் ஆனால் இப்படத்தில் முற்றிலும் அவருடைய வேறொரு முகத்தை பார்க்கலாம். V.J.வினோத் திடீரென ஒரு கணத்தில் படத்திற்குள் வந்தார்.
சுனைனா அவர்கள் இப்படத்தை ஒப்பு கொண்டதிற்காக, அவருக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரை உணர்வூபூர்வமான அல்லது ரொமான்ஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படத்தில் அவரை காமெடி கலந்த ஆக்சன் அவதாரத்தில் காண்பீர்கள். பிரவீன் படம் முழுதும் எனக்கு மிகப் பெரும் துணையாக இருந்தார்.
ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக மிகப் பெரும் தொகையை செலவிடுகிறார்கள். இப்படம் சில மணி நேரம் அவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்கும். நாம் தியேட்டரில் படம் பார்த்து கொண்டாடி ஒரு வருடம் ஆகிவிட்டது.
பெரும் முன்னெடுப்பாக துணிந்து திரையரங்கில் படத்தை வெளியிட்டதற்கு ‘மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன்’ படங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அப்படங்களால்தான் எங்கள் படமும் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
விநியோகஸ்தர் சக்திவேலன் எங்கள் படத்தைப் பார்த்து, படத்தின் உரிமையைப் பெற்று திரையிடவுள்ளது எங்களுக்கு பெரும் ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் தந்துள்ளது. நல்லிதயம் கொண்ட மனிதர். திரைப்படம் பற்றிய அபார அறிவு கொண்டவர். இங்கு அவரது இருப்பு கடவுளின் இருப்பை போன்று பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது…” என்றார்.
நடிகர் பிரவீன் குமார் பேசும்போது, “இயக்குநர் டென்னிஸ்ஸும் நானும் சாம் ஆண்டனின் ‘100’ படத்தின் உருவாக்கத்தில் இருந்தே நண்பர்கள்தான். அவரும் நானும் பல திரைக்கதைகளை விவாதித்துள்ளோம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இருவரும் வெற்றி பெறுவதை காண ஆவலாக உள்ளோம். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கான வேலையை நானே உருவாக்கியுள்ளேன்.
இப்படத்தை ஒப்புக் கொண்டதிற்காக சுனைனாவிற்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர் எப்போதும் சவாலான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து செய்கிறார். அவரது பங்களிப்பு இப்படத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்ததது. படத்தின் நடிகர்கள் அனைவரும் தங்களது மிகச் சிறந்த பங்களிப்பை தந்துள்ளனர்.
படதிற்கு பெரும் தூணாக விளங்கிய தொழிற் நுட்ப குழுவிற்கு மிகப் பெரும் நன்றி. ஹீரோ ஹீரோயினைவிட மிகச்சிறப்பான கெமிஸ்ட்ரி இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இருந்தது. இப்படத்தில் பாடல்கள் குறைவு. ஆனால், பின்னணி இசையில் கலக்கியுள்ளார் சித்து குமார். சக்திவேலன் அவர்களுக்கு பெரிய நன்றி. அவர் இல்லாமல் இத்தனை பெரிய வெளியீடு இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்காது…” என்றார்.
நடிகை சுனைனா பேசும்போது, “இயக்குநர் டென்னிஸ் மிகவும் கடின உழைப்பாளி. இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். படப்பிடிப்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை உறுதி செய்து என்னை வெகு இயல்பாக பார்த்துக் கொண்டார்.
படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, ஒரு நாயுடன் நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், படப்பிடிப்பில் பார்த்தால் பிட் புல் இருந்தது. அதனோடு நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் என்னோடு நட்பாக இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப் போக நாங்கள் நண்பர்களாக ஆகிவிட்டோம். இருவரும் இணைந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளோம்..” என்றார்.
நடிகர் கருணாகரன் பேசும்போது, “இப்படத்தில் பணி புரிந்தது மிக அற்புதமான ஒரு அனுபவமாக இருந்தது. எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்தது இப்படத்தின் ஹிரோயின்கள்தான். அவர்களது இயல்பான நிலையிலிருந்து வெளிவந்து ஆக்சன் காட்சிகள் முதற்கொண்டு மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்கள்.
ராகேஷ் இப்படத்தின் மூலம் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறிவிட்டார். டிஸ்கவரி தமிழ் சேனலில் தொகுப்பாளராக எனக்கு பயிற்சி அளித்தார். அந்த சேனலில் எனது பணியைப் பார்த்தது எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். அனைத்து புகழும் ராகேஷுக்கு உரித்தானது. இன்று சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு.. அங்கிருந்து மன்னிப்பு கேட்டு இங்கு வந்துள்ளேன். இப்படக் குழுவினரின் கடின உழைப்பே அதற்கு காரணம்..” என்றார்.
தயாரிப்பாளர் விஸ்வநாதன் பேசும்போது, “தமிழ்த் திரை உலகில் எனக்கு தெரிந்த ஒரே நபர் டென்னிஸ் மட்டும்தான். அவர் என்னிடம் திரைக்கதையை சொன்னவிதம் அபாரமாக இருந்தது. என்னால் காட்சிகளை கண் முன்னால் பார்க்க முடிந்தது. அட்டகாசமான நடிகர் குழுவால் திரைக்க்கதை காட்சிகளாக மேலும் மெருகு கூடியுள்ளது.
யோகி பாபு, கருணாகரன் முதல் அனைவரும் அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். பிரவீன் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாயகிக்காக நிறைய பேரை தேடினோம். சுனைனா இப்படத்தை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. அதுல்யா மலையாள திரை உலகில் ஏற்கனவே 3 படங்கள் செய்து பிரபலமானவர். நடிகர் மம்முட்டியுடன் நடித்துள்ளார். இயக்குநர் டென்னிஸ், ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் மற்றும் எடிட்டர் இப்படத்தின் பெரும் தூணாக இருந்தனர். இப்படத்தை மிகப் பெரும் வெளியீடாக மாற்றிய சக்திவேலன் அவர்களுக்கு நன்றி…” என்றார்.