full screen background image

குழந்தை கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘துணிகரம்’ படம்..!

குழந்தை கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘துணிகரம்’ படம்..!

ஏ-4  மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர்.வீரபாண்டியன் மற்றும்  டாக்டர் டெய்சி வீரபாண்டியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் துணிகரம்’.

கதை – டினோ, ஒளிப்பதிவு- மெய்யேந்திரன் கெம்புராஜ்,  இசை – பி.ஷான் கோகுல், பாடல்கள் – கு.கார்த்திக், பி.ஷான் கோகுல், நடன இயக்கம் – ராஜு, படத் தொகுப்பு – என்.பிரகாஷ், இயக்கம் – பாலசுதன்.

முழுக்க, முழுக்க பரபரப்பான  சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. ஒரு குழந்தையின் கடத்தலைச் சுற்றிப் பயணிக்கின்ற கதையில் இந்தப் படம் தயாராகியுள்ளது.  

குழந்தைக் கடத்தல்  பின்னால் உள்ள கடத்தல் கும்பல்களின் துணிகரமான செயல்களும் அவர்களின் நெட்வொர்க்கும்  எப்படிப்பட்டது என்பதை பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். சில கடத்தல் சம்பவங்கள் நமது நெஞ்சை உலுக்கியிருக்கும்.

இந்தப் படத்தில் குழந்தை கடத்தல் கும்பல்களைப் பற்றி விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குர் பாலசுதன்.

ஒரு தம்பதியினர் மிக, மிக  அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அந்த வாகனத்துக்குள் திடீரென்று ஒரு  குழந்தைக் கடத்தல் கும்பல் ஏறிக் கொள்கிறது. அவர்கள் கண்ணெதிரே குழந்தை கடத்தப்பட்டு இருப்பதை அறிகிறார்கள். அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்கள், தாங்கள் திட்டமிட்டபடி மருத்துவமனைக்குச் சென்றார்களா..? அல்லது கடத்தப்பட்ட குழந்தை மீட்புக்கு உதவி செய்தார்களா?..  என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இயக்குநர் மிஷ்கினின் பாணியில்  இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாக இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் பாலசுதன் கூறுகிறார்.

அவர் மேலும் பேசுகையில், “விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தத் துணிகரம்’ படத்தின் இரண்டாம் பாதியின் கதை முழுக்க ஒரு ஆம்புலன்சில் பயணிக்கிறது. விரைவாக ஓடும் ஆம்புலன்சுடன் கதையும் பரபரப்பாக ஓடுகிறது. இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.

இப்படம் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும், இளம் தம்பதியினருக்கும் மறக்க முடியாத படமாகவும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி? அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாகவும் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் பாலசுதன்.

இந்தத் ‘துணிகரம் ‘ திரைப்படத்தை உலகமெங்கும் வரும் மே 6-ம் தேதி ஆக்சன் – ரியாக்சன் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Our Score