சர்வானந்த், அமலா, ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் இயக்கியிருக்கும் படம் ‘கணம்’.
இந்தக் ‘கணம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நடிகை ரீத்து வர்மா பேசும்போது, “தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு இது எனக்கு இரண்டாவது படம். தமிழ் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பினை கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. இயக்குநர் என்னிடம் சிறப்பாக கதையைக் கூறினார்.
அமலா மேடம் உள்ளேயும், வெளியேயும் அழகான ஆன்மா உடையவர். சமுதாயத்திற்கும் நிறைய பங்களிப்பு செய்து வருகிறார். ஷர்வானந்த் புத்துணர்ச்சியுடன் நடித்திருக்கிறார். இயக்குநர் இந்தப் படத்தை உணர்வுபூர்வமாக கொண்டு சென்றிருக்கிறார்.
நான் இதுவரையிலும் நாசர் சாருடன் 4 படங்களில் நடித்துவிட்டேன். சதீஷ் அண்ணா மற்றும் ரமேஷ் திலக் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. சுஜித், ஸ்ரீஜித் போன்ற புத்திசாலித்தனமான தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் உழைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்கள் சிரிப்பீர்கள்.. அழுவீர்கள்.. படத்துடன் பின்னி பிணைந்து இருப்பீர்கள்…” என்றார்.