full screen background image

“அரண்மனை’ போல ‘தலைநகரம்’ படமும் தொடர்ந்து வரும்” – சுந்தர்.சி.யின் நம்பிக்கை!

“அரண்மனை’ போல ‘தலைநகரம்’ படமும் தொடர்ந்து வரும்” – சுந்தர்.சி.யின் நம்பிக்கை!

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V.Z.துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம்-2’.

சுந்தர் சி,, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் V.Z.துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை கமலா தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருடன் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் S.M.பிரபாகரன்  பேசும்போது, “எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது.  நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன். ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக் கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர்.சி அண்ணாவைச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப் படத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து நாங்கள் இணைந்து நல்ல படைப்புகள் தருவோம். எங்களை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும்போது, “எனக்குத் துரை எப்பவுமே பிடித்த இயக்குநர். ஒரு ஃப்ரேம்கூட மிஸ் பண்ண முடியாத அளவில் தலைநகரத்தை இயக்கியுள்ளார். தொட்டி ஜெயா படத்தில் வில்லன் இடத்திற்கே சென்று நாயகன் மோதுவான். அந்த மாதிரி காட்சியைத் திரையில் உருவாக்கிய முதல் இயக்குநர் அவர்தான். அவரது கதைகள் என்றுமே நன்றாக இருக்கும்.

தயாரிப்பாளர் நல்ல மனதுக்காரராக இருக்கிறார். சுந்தர்.சி-யை திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்…” என்றார்.

பதிப்பாளர் ராம்ஜி பேசும்போது, “நான் ஒரு பதிப்பகம் நடத்துகிறேன். ஒரு படத்திற்குச் சின்ன பைனான்ஸ் பண்ண வேண்டும். கதை கேட்டு முடிவு பண்ண முடியுமா எனக் கேட்டார்கள். நான் கதை கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்தது. பைனான்ஸ்க்கு உள்ளே வரும் போது நிறையப் பேர் எச்சரித்தார்கள். ஆனால் துரை எப்போதுமே முதல் நாளே வட்டி தொகையோடு வந்து நிற்பார். இந்தப் படத்தை அவர்கள் எந்தளவு கஷ்டப்பட்டுச் செய்துள்ளார்கள் என்று தெரியும். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகர் ஜெ.சுரேஷ் பேசும்போது, “நான் இந்த விழாவிற்கு வருவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இயக்குநர் துரையும் நானும் 20 வருட கால நண்பர்கள், இரண்டாவது இந்தக் கதையை நானும் துரையும் சேர்ந்து தயாரிப்பதாக இருந்தது. இந்தக் கதையை அவர் சொன்னபோதே பிரமித்தேன். என்ன மாதிரியான ஒரு நெரேஷன். மூணாவது காரணம் சுந்தர்.சி, அவரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவரோடு நான் சேர்ந்து படம் செய்வதாக இருந்தது, அவரை வேஷ்டியில் பார்க்க மம்மூட்டி போலவே உள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர், பாடல்கள் எல்லாம் அட்டகாசமாக உள்ளது. இப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும்..” என்றார்.

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டுதான் இந்த விழாவிற்கு வந்தேன், இயக்குநர் துரை அண்ணன் எனக்கு குரு, அவருடைய நல்ல பழக்கங்களை நானும் பின்பற்றி வருகிறேன், சுந்தர்.சி சாரின் உழைப்பு சாதாரணம் இல்லை, 27 வருடங்களாக இந்தத் துறையில் நீடித்து, நிலைத்திருக்கிறார். தலைநகரம் முதல் பாகத்தைவிடவும் இந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக இருக்கும். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பிரபாகரருக்கு வாழ்த்துகள் கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்கு வெற்றியாகத்தான் இருக்கும்..” என்றார்.

இயக்குநர் சசி  பேசும்போது, “நண்பன் துரையிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படங்களில் எமோஷன் அதிகமாக இருந்ததற்கு, அவருடன் கதையைப் பகிர்ந்து கொள்வதுதான் காரணம்.

டிரெய்லரில் ஆக்சன் எல்லா காட்சிகளிலும் இருந்தது. ஆனால் கண்டிப்பாக ஒரு மிகப் பெரிய எமோஷன் இருக்கும். எமோஷன் இல்லாத கதை கண்டிப்பாக ஜெயிக்காது. எமோஷன் இல்லாமல் துரை படமே செய்யமாட்டார். அதனால்தான் 20 வருடங்களுக்கும் மேலாகத் அவர் திரையுலகத்தில் இருக்கிறார். சுந்தர்.சி எனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் இயக்குநர். இருவரும் சேர்ந்து படம் செய்துள்ளார்கள். கண்டிப்பாக இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” என்றார்.

நடிகர் பரத் பேசும்போது, “என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களைத் தந்த இயக்குநர்கள் எல்லாருக்கும் நன்றிகள். அதில் முக்கியமானவர் துரை சார். நேபாளி படத்தில் என்னை அவ்வளவு சிறப்பாக  வடிவமைத்தார். அவர் அதிக நாட்கள் உழைத்த படம் நேபாளி. அவர் வேலையில் டெரராக இருப்பார். அவரின் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்கும். அதனால்தான் 20 வருடத்திற்கும் மேலாக இயக்குநராக வலம் வருகிறார். சுந்தர்.சி சாரின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்த மேடையைப் பயன்படுத்தி இங்கே அவரிடம் வாய்ப்பு கேட்டுக் கொள்கிறேன். சுந்தர்.சி சார் அட்டகாசமாக இந்தக் கதையில் பொருந்திப் போகிறார். இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும்.” என்றார்.

நடிகை ஆயிரா பேசும்போது, “ரொம்ப பெருமையாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை தந்த துரை சாருக்கு என் நன்றிகள். சுந்தர்.சி  சார் படத்தில் நடிக்கும்போது, நிறைய ஆதரவாக இருந்தார். இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்…” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இயக்குநர் துரை மிக எமோஷலான மனிதர். எப்போதும் உரிமையோடு பேசுவார். பழனி படத்திற்குப் பிறகு நேபாளியில் பரத்தை வைத்து மிரட்டியிருந்தார். அப்போதுதான் அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என உணர்ந்தேன். துரை எப்போதும் சினிமாவை மட்டுமே நேசிப்பவர்.  அவர் வெற்றி பெற வேண்டும்.

சுந்தர்.சி இத்தனை காலம் சினிமாவில் தாக்குப் பிடிக்கக் காரணம் அவரின் திட்டமிடல் அபாரமானது, இந்தக்கூட்டணி கண்டிப்பாக வெற்றி அடையும் வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகர் சுந்தர்.சி பேசும்போது, “இங்கு வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். தலைநகரம்’ டைட்டில் அவரிடம்தான் இருந்தது, அவர் பெருந்தன்மையாகத் தந்தார். ‘தலைநகரம்-2’-ம் பாகத்தை நாம் எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால், துரை சார் கேட்டபோது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனேயே ஓகே சொல்லிவிட்டேன்.

அவரின் ‘இருட்டு’ படம் மிக அருமையான திரைக்கதை. அந்தப் படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. ‘இருட்டு’ வெற்றிதான் ‘தலைநகரம்’ படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது. இன்னும் நான் படமே பார்க்கவில்லை அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர் அவர். இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் துரை சார் செதுக்கியிருக்கிறார். ‘அரண்மனை’போல் இந்தப் படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன்…” என்றார்.

இயக்குநர் V.Z.துரை பேசும்போது, “நான் யாரிடமும் துணை இயக்குநராகப் பணி புரியவில்லை. என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சக்கரவர்த்தி சார் அவருக்கு நன்றி. அவர் பலருக்கு அறிமுகம் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் பெரிய தூண் என் தம்பி பிரபாகர் தயாரிப்பாளர். என் மீது நம்பிக்கை வைத்த ராம்ஜி சாருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மற்றும் இசை அமைப்பாளர் ஆகியோருக்கு எனது மிகப் பெரிய நன்றிகள். சுந்தர்.சி சார்தான் எனக்கு ஆசிரியர். பல விஷயங்களை அவரிடம் கற்றுக் கொண்டேன். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  இந்தப் படத்தில் கதையைக் கேட்காமலேயே  நடிக்க ஒப்புக் கொண்டார்.  இயக்குநர் சசி சாருக்கு நன்றி.  நாங்கள் நீண்ட காலமாகப் பார்த்துக் கொள்ளவில்லை. எனினும் எங்கள் பந்தம் மாறவே இல்லை.  இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும்  நன்றி. படம் நன்றாக உள்ளது. அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்…” என்றார்.

Our Score