கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘செல்ஃபி’.
இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தை இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்தப் படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத் தொகுப்பையும் செய்துள்ளனர்.
இப்படம் ஏப்ரல் 1-ம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, “எங்கள் ‘செல்ஃபி’ படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட்ட தாணு சார் அவர்களுக்கு நன்றி. மேலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் உள்பட அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக உருவாக்கிய படத்தின் இயக்குநர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் அனைவருக்கும் நன்றி…” என்றார்.
இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா பேசும்போது, “இந்த ‘செல்ஃபி’ படத்தின் வெற்றி விழாவை நன்றி விழாவாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணம் தாணு சார்தான். மேலும் பத்திரிகையாளர்களுக்கும் ஒரு நன்றி.
ஒரு மனிதனின் முக்கியமான தேவையை சரியாக சொன்ன படம்தான் இந்த ‘செல்ஃபி’. எளிய மனிதனிடம் கல்வி நேர்மையாக சென்று சேர வேண்டும் என்பதை சிறப்பாக சொன்ன படம் இது. கல்வி வியாபாரமாக மாறிவிட்டால் ஏழைகளுக்கு பெரிய கஷ்டம் என்பதைத்தான் இப்படம் பேசியது. பசியை போக்குவதுதான் கல்வி. சில குறைகளை நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதற்கும் நன்றி.
இயக்குநர் மதிமாறன் அடுத்தப் படத்தை இன்னும் மிகச் சிறப்பாக தருவார். மதிமாறன் எந்தக் கீரிடமும் இல்லாமல் மேன்மையாக பழகும் தன்மை கொண்டவர். குணாநிதி மிகவும் நல்ல பையன். சபரிஷ் தயாரிப்பாளர் போல் அல்லாமல் மேனேஜர் போல் வேலை செய்தார். பணத்தைக் கையாளும் மனிதனுக்கு படபடப்பு வரும். ஆனால் சபரிஷ் ரிலாக்ஸாக இருந்தார்.
ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் அழகாக நடித்திருக்கிறார். அவர் சிரித்தால் அழகாக இருக்கும். அவர் மேலும் இதுபோல் படங்களை கொடுக்க வேண்டும். கவுதம் மேனனும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நன்றியுணர்வுதான் எல்லா உணர்வுகளுக்கு தாய். அந்த நன்றியை பத்திரிகையாளர்களாகிய உங்களிடத்தில் நாங்கள் சொல்லிக் கொளஅகிறோம்…” என்றார்.
நடிகை வர்ஷா பொல்லம்மா பேசும்போது, “ஒரு படம் எவ்வளவு நல்லாயிருந்தாலும் அதை மக்களிடம் சேர்க்க ஒரு சப்போர்ட் வேணும். எங்களுக்கு தாணு சாரின் சப்போர்ட் இருந்தது. அவருக்கு நன்றி.
இயக்குநர் தனது முதல் படமாக மக்களுக்கான படமா எடுத்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஜி.வி.பிரகாஷின் நடிப்பை இப்படத்தில் என்சாய் செய்தேன். குணா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கும் வாழ்த்துகள். சக்சஸ் மீட் என்பது சந்தோஷமானது. அனைவருக்கும் நன்றி..” என்றார்.
நடிகர் டி.ஜி.குணாநிதி பேசும்போது, ‘தாணு சார், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன் உள்பட அனைவருக்கும் நன்றி. குல தெய்வம்தான் குலம் காக்கும் என்பார்கள். இந்தப் படத்திற்கு தாணு சார்தான் குலசாமி. ஜி.வி. சார் என்னை நல்ல என்கிரேஜ் செய்வார். இப்படி வேறு ஹீரோ இருப்பார்களா என்று தெரியாது. அதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வர்ஷா கடினமான சூழலிலும் வந்து நடித்துக் கொடுத்தார். மதிமாறன் அண்ணன் என்னை ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணி உள்ள பையனாக மாற்ற நிறைய விஷயங்களைச் சொல்லித் தந்தார். படத்தில் எல்லாரும் நன்றாக உழைத்து இந்தப் படத்தை வெற்றிகரமான படமாக்க உதவியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் மதிமாறன் பேசும்போது, “2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தை ஆரம்பித்தேன். அப்போது வெற்றிமாறன் சார் “நீ படம் இயக்குறதை கேள்விப்பட்டால் பலரும் பாராட்டுவாங்க. ஆனால், அதைவிட படத்தின் தயாரிப்பாளர் நல்லாருக்கணும் என்று நினைத்து படமெடு..” என்று சொன்னார். இன்றைக்கு வெற்றி மாறனை நினைத்துப் பார்க்கிறேன்.
ஜி.வி. இந்தப் படத்தில் எனக்கு ஒரு நண்பனைப் போல நடித்தார். குணா நடிப்பை அனைவரும் பாராட்டி வருவது மகிழ்ச்சி. தாணு சார்தான் இந்தப் படத்தை நிறுத்தி நிதானமாக தியேட்டருக்கு எடுத்து வந்தார். தாணு சார் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என் குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி” என்றார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, “நன்றி தாணு சார். தமிழ்ச் சினிமாவில் அவர்தான் எல்லாருக்கும் காட்பாதர். மதிமாறனுக்கு முதல் நன்றி. இது நல்ல படம். இந்த நல்ல படத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சி. குணாநிதி, வர்ஷா, சுப்பிரமணிய சிவா, உள்பட அனைவருக்கும் நன்றி. சின்ன பட்ஜெட்டில் எடுத்த இந்த படம், நல்ல லாபகரமான படமாக வந்ததில் ரொம்ப சந்தோஷம். படம் வெளிவருமுன்னே நல்ல லாபமாக மாற்றியவர் தாணு சார். படத்தை மிகச் சிறப்பாக எழுதிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி…” என்றார்.
கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “செல்ஃபி’ என்ற தலைப்பை வைத்து இயக்குநர் மதிமாறன் என்னிடம் ஒப்புதல் கேட்டதும் “சரி” என்றேன். இந்தப் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றி மாறனுக்கும் நன்றி.
இந்தப் படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன். தம்பிகள் கேட்டதும், “சரி.. நீங்களே தயாரிங்க…” என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப் படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறையவே பாராட்டலாம்.
ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. இந்த ‘செல்ஃபி’ படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போக வேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார். 160 அடி பாயக் கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம் மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குநர் மதிமாறனை மிகவும் பாராட்டினார்.
அடுத்து எனது வி.கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக இயக்குநர் தம்பி மதிமாறன் ஒரு படம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே அவருக்கு 10 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப் படம் தியேட்டருக்குத்தான் வரணும்னு நினைச்சேன். இந்தப் படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
ஒரே ஒரு காட்சி மட்டுமே போட்டுக் காண்பித்து படத்தை நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்தேன். இப்படம் மிகப் பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது..” என்றார்.
















