full screen background image

“இந்தி தேசிய மொழியா..?” – டிவீட்டரில் மோதிக் கொண்ட நடிகர்கள் கிச்சா சுதீப்-அஜய் தேவ்கன்

“இந்தி தேசிய மொழியா..?” – டிவீட்டரில் மோதிக் கொண்ட நடிகர்கள் கிச்சா சுதீப்-அஜய் தேவ்கன்

சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற விழா ஒன்றில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்தின் வெற்றி குறித்து பேசிய கன்னட நடிகரான கிச்சா சுதீப், “இனிமேலும், இந்தி மொழியை ‘தேசிய மொழி’யென யாரும் சொல்ல வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.  

இந்தச் செய்தி இணையத்தில் பரவியதையடுத்து இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதங்கள் எழுந்தன.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன், கிச்சா சுதீப்பை டேக் செய்து தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் செய்தியை இட்டார்.

அந்த டிவீட் செய்தியில், “பிரதர், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி. உங்களைப் பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்..? எப்போதும் இந்திதான் நம் அனைவரின் தாய் மொழி. அதுதான் தேசிய மொழி…” என்று குறிப்பிட்டார்.

அஜய் தேவ்கனின் இந்த ட்வீட் செய்திக்கு கிச்சா சுதீப்பும் உடனடியாக பதிலடி கொடுத்தார்.

“நான் அந்த இடத்தில் சொல்ல வந்த விஷயமே வேறு சார். உங்கள் காதுகளுக்கு அது தவறாக வந்து சேர்ந்திருக்கலாம். நான் ஏன் அப்படி சொன்னேன் என்பதை தனியாக உங்களை நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன். தேவையற்ற விவாதத்தை உங்களுடன் கிளப்ப எனக்கு என்ன சார் இருக்கு..? எனக்கு எல்லா மொழியும் பிடிக்கும். எனக்கு அனைத்து மொழி மீதும் அன்பும், மதிப்பும் இருக்கு சார். இந்தப் பிரச்சனையை இத்துடன் முடித்து வைக்க நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் நான் பேசியதே வேற விஷயம் சார்.. உங்கள் மீது பெரிய அன்பும் மரியாதையும் இருக்கு, விரைவில் உங்களை சந்திக்கிறேன்…” என்று அந்த டிவீட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கிச்சா சுதீப்.  

தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு ட்வீட் செய்தியில் “இந்தியில் நீங்க போட்ட ட்வீட்டை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு அந்த மொழி வளர்ந்திருக்கிறது என்பது உண்மைதான். இதே ட்வீட்டை நான் கன்னட மொழியில் போட்டிருந்தால் நீங்கள் அதை எந்த அளவுக்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தால், எனக்கு ஆச்சரியமாக இருக்கு சார்.. நாம் அனைவருமே இந்தியர்கள்தான்…” என்று உள் குத்தோடு சொல்லியிருக்கிறார் கிச்சா சுதீப்.  

இதற்கும் பதில் சொன்ன அஜய் தேவ்கன் “நண்பா… கிச்சா சுதீப் எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி. நான் எப்போதுமே சினிமா துறை ஒன்றுதான் என நினைப்பவன். நாம் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும். அதே சமயம் எங்கள் மொழியையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என நினைக்கிறேன். மொழி பெயர்ப்பு பிரச்சனையால் இந்த தவறு நடந்திருக்கலாம்…” என்று சொல்லி தற்காலிகமாக பஞ்சாயத்தை முடித்திருக்கிறார் அஜய் தேவ்கன்.

ஜய் தேவ்கன் இந்த மொழிப் பிரச்சினையை முடித்தாலும் கிச்சா சுதீப்பின் ரசிகர்கள் விடுவதாக இல்லை.

கிச்சா சுதீப்பின் டிவீட்டில் கமெண்ட் செய்திருக்கும் பலரும் அஜய் தேவ்கனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

“கிச்சா சுதீப் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. இந்தி தேசிய மொழி கிடையாது. எந்த மாநில மொழியிலும் டப் செய்து படங்களை வெளியிட அவருக்கு உரிமை உள்ளது. பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கும் நீங்களெல்லாம் அவரைப் பற்றிப் பேசவே கூடாது.”  

“கன்னடப் படங்களை எதற்காக இந்தியில் டப் செய்கிறீர்கள்..?” என்று கேட்கிறீர்களே.. நீங்கள் மட்டும் ஏன் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்தீர்கள்?” என்றும்,  

“மலையாள படமான ‘த்ரிஷ்யம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நீங்கள்தானே நடித்தீர்கள். பிறகு ஏன் “கன்னட படத்தை இந்தியில் டப் செய்யக் கூடாது” என்று சொல்கிறீர்கள்..?” என்றும்,

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் ‘கே.ஜி.எஃப்.-2’ படம் வெற்றியடைந்ததை உங்களால் தாங்க முடியவில்லை. இதனால்தான் இப்படி பேசுகிறீர்கள்..” என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

Our Score