full screen background image

“எதுகை, மோனை பேச்செல்லாம் சங்கத்திற்குப் பயன்படாது…” – டி.ராஜேந்தரை கண்டிக்கும் ராதாகிருஷ்ணன்

“எதுகை, மோனை பேச்செல்லாம் சங்கத்திற்குப் பயன்படாது…” – டி.ராஜேந்தரை கண்டிக்கும் ராதாகிருஷ்ணன்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் 22-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இத்தேர்தலில் தேனாண்டாள் ராமசாமி முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியும்’, டி.ராஜேந்தர் தலைமையில் ‘தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி’யும் போட்டியிடுகின்றன.

இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி’, ‘முன்னேற்ற அணி’ என நான்கு அணிகள் போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில் ‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’க்கும்-‘தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி’க்கும் இடையில் மட்டுமே போட்டி என்கிற சூழல் நிலவி வருகிறது

இன்னமும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

கடந்த 11-ம் தேதியன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த T.ராஜேந்தர் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவது போல் பேசினார்.

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் கூறுவதை தவிர்த்து வழக்கமான எதுகை மோனை வார்த்தை ஜாலங்களை கையாண்டார்.

“VPF-க்கு எதிராக முதன்முதலாகக் குரல் கொடுத்தது நான்தான்”. “தமிழ் சினிமாத் துறையின் நன்மைக்காக பிரதமர் மோடி கார் முன்னே குதிப்பேன்…” என்றெல்லாம் கூறி அனைவருக்கும் அதிர்ச்சியூட்டினார்.

இது சம்பந்தமாக கெளரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, “சங்கத் தலைவர் பதவிக்காக வேறு சங்கங்களில் தலைமைப் பொறுப்பில் இல்லாதவர்கள் போட்டியிட கூடாது என்கிற சங்க வீதியைக்கூட பின்பற்றாதவர் டி.ஆர்.

 டி.ராஜேந்தரின் அந்த 45 நிமிட பேட்டியை நானும் பார்த்தேன். அவர் தயாரிப்பாளர்கள் நலன் பிரச்சினை பற்றி எதுவுமே பேசவில்லை.

மீடியாவை சந்திக்கிறபோது பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல் பேசுகிறார். அவர் பேசி முடிக்கும்போது என்ன சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை

எதுகை, மோனை பேச்செல்லாம் சினிமாவுக்குத்தான் பயன்படும். சங்கப் பணிகளுக்குப் பயன்படாது என்பதை T.R. முதலில் புரிந்து கொள்ள வேண்டும். டிக்கட் கட்டணத்தை பற்றி பேசுகிறபோது அவர் யாருக்காக பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

விநியோகஸ்தர்களுக்கா..? தயாரிப்பாளர்களுக்காகவா..? பொதுமக்கள் நலன் பற்றி பேசுகிறவர் அரசியல் கட்சிக்குத்தான் போக வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மேடையை பயன்படுத்தக் கூடாது.

தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினரான T.ராஜேந்தர் தேர்தலில் போட்டியிடக் கூடாதா…?

“வேண்டாம் என நாங்கள் கூறவில்லை. தயாரிப்பாளர்கள் தொழில் ரீதியாக பிரச்சினைகளை அதிகமாக எதிர்கொள்வது  திரைப்பட விநியோகஸ்தர்களுடன்தான். அந்த அமைப்பின் உச்சபட்ச தலைமை பொறுப்பில் தற்போது T.R. இருக்கிறார். அந்தப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டு பின்பு இங்கு வந்து தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம்.

ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் சவாரி செய்வது இரு தரப்புக்குமே ஆபத்தாக முடியும். அவர் மீதான நம்பகத்தன்மை விமர்சனத்துக்குள்ளாகும்.”

“VPF பற்றிய தெளிவான முடிவினை எந்த சங்கமும் கூறவில்லையே..?”

“தயாரிப்பாளர்கள் பல கூறுகளாக பிரிந்து இருப்பதால்தான் இப்படி ஒரு கேள்வி வருகிறது. தியேட்டர் உரிமையாளர்களும், டிஜிட்டல் நிறுவனங்களும் கூட்டுக் கொள்ளை நடத்தி வந்தது இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது.

தேர்தல் முடிந்த பின் VPF கட்டணத்தை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிப்போம். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். VPF கட்டணம் அறவே ரத்து செய்யும் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க நிதி நிலை பலப்பட வாய்ப்பு உண்டு.”

“VPF கட்டணத்துக்கும் சங்க நிதி ஆதாரத்திற்கும் என்ன தொடர்பு..?”

“ஒவ்வொரு வருடமும் சுமார் 200 கோடி ரூபாய் டிஜிட்டல் புரவைடர்களுக்கு கட்டணமாக தயாரிப்பாளர்கள் மூலம் வருமானமாக கிடைக்கிறது. இதனை முழுமையாக ரத்து செய்கிறபோது தயாரிப்பாளர்களிடம் குறைந்தப்பட்சம் 5% சங்க அறக்கட்டளைக்கு சேவை கட்டணமாக பெற்றாலே 10 கோடி ரூபாய் கிடைக்கும்.

பிற வணிக ரீதியான வருவாய் மூலம் 20 கோடி ரூபாய் கிடைக்கும் திட்டமும் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளது..” என்றார்.

Our Score