சென்ற ஆண்டு ஜூன் 24-ம் தேதி காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற மென்பொருள் பொறியாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இந்தியா முழுமைக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளம் பெண் ஸ்வாதியை ஒருதலையாய் காதலித்த ராம்குமார் என்பவர்தான் சுவாதியை கொலை செய்தார் என்று கூறி அவருடைய சொந்த ஊரான செங்கோட்டை அருகேயிருக்கும் மீனாட்சிபுரத்தில் வைத்து ராம்குமாரை கைது செய்த்து போலீஸ்.
ஆனால் அந்த நேரத்தில் ராம்குமார் தன் கழுத்தை பிளேடு வைத்து அறுத்துக் கொண்டதாக போலீஸ் கூற.. கழுத்தில் காயம் பட்ட நிலையில் ராம்குமார் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காயம் ஆறிய நிலையில் அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் செப்டம்பர் 18-ம் தேதியன்று புழல் சிறையில் மின்சார வயரை வாயில் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுவாதி கொலை வழக்கு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.
இந்தப் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து இப்போது தமிழில் சத்தமேயில்லாமல் ஒரு சினிமாவை தயாரித்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பு ‘ஸ்வாதி கொலை வழக்கு’ என்பதுதான்..!
இந்தப் படத்தை ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S.K.சுப்பையா தயாரித்துள்ளார். இவர் நடிகர் விஜயகாந்தின் முப்பதாண்டு கால உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’ அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ மற்றும் ‘வஜ்ரம்’ ஆகிய படங்களை இயக்கிய திரைப்படக் கல்லூரி மாணவ இயக்குநரான எஸ்.டி.ரமேஷ் செல்வன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘ஸ்வாதி கொலை வழக்கை’ விசாரிக்கும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிகர் அஜ்மல் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார்.
மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும், A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும், பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஜோன்ஸ் ஆனந்த், இசை – ஷாம் டி ராஜ், கலை – ஜெய்சங்கர், படத் தொகுப்பு – மாரி, தயாரிப்பு நிர்வாகம் – k.சிவசங்கர், கதை வசனம் – R.P.ரவி, திரைக்கதை, இயக்கம் – எஸ்.டி.ரமேஷ் செல்வன், தயாரிப்பு – S.K.சுப்பையா.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.டி.ரமேஷ் செல்வன், “சில நிஜ சம்பங்களை படமாக்கும்போது சுவாரஸ்யத்திற்காகவும், பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு.
ஆனால் இந்த ‘ஸ்வாதி கொலை வழக்கு’ படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம்.
மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பங்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் ஒவ்வொருவரின் மனமும் திடுக்கிட்டுப் போகும். இப்படி கூடவா நடந்திருக்கும் என்று மக்கள் நிச்சயமாக யோசிப்பார்கள்..” என்றார் இயக்குநர்.