இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சான்’ பாடல் மற்றும் டிரைலர் பத்திரிகையாளர்களுக்காக இன்று காலை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குனர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன், சூரி, தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன், சுபாஷ் சந்திரபோஸ், இயக்குனர்கள் பார்த்திபன், சசி, விஜய், தயாரிப்பாளர்கள் கேயார், அபிராமி ராமநாதன், ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசும்போது, “சிங்கம்’ படத்திற்கு பிறகு ஒரு நல்ல கதையுள்ள படத்தில் நடிக்கணும் நினைச்சேன். அப்பொழுதுதான் லிங்குசாமி என்னிடம் 4 கதையை ரெடி செய்துகொண்டு வந்து என்னிடம் காட்டினார். அதில், 4-வது கதை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அதுதான் அஞ்சானாக இப்போது உருவாகியிருக்கிறது. இன்னொரு கதையும் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா அதுல நான் நடிக்கலை.. கார்த்தி நடிக்கப் போறார்.
இந்த படத்தில் ‘ஏக் தோ தீன் சார்’ என துவங்கும் பாடலை எனது சொந்த குரலில் பாடி இருக்கிறேன். இந்த பாடல் டிராக்கை யுவன் தானே பாடி பதிவு செய்து வைத்திருந்தார். பாட்டை நான் கேட்டுட்டு, இதுக்கு ஒரு நல்ல பாடகரை பாட வைக்கணும்னு லிங்குசாமிகிட்ட சொன்னேன். அவர் உடனே நீங்களே பாடிருங்கன்னுட்டாரு.. ‘என்ன ஸார்.. நான் எதுக்கு?’ன்னு எஸ்கேப்பாகத்தான் பார்த்தேன்.. ஆனா இவங்க ரெண்டு பேரும் விடலை.. யுவனும், லிங்குசாமியும் ‘நீங்கதான்’னு உறுதியா சொல்லிட்டாங்க..
முதல்ல பாடுறதுக்கு ரொம்பவும் தயக்கமாகத்தான் இருந்துச்சு. ஸ்டூடியோவுக்கு கூப்பிட்டு பாடலை ரெக்கார்டு செஞ்சாங்க.. வெளில வந்து பார்த்தா யுவனை தவிர யாரையும் காணோம்.. சரி.. நாம பாடினது பிடிக்கலை போலிருக்கு.. தப்பிச்சிட்டோம்னு நினைச்சிருந்தேன்.. ஆனா பின்னாடி நான் பாடினதுதான் ரிக்கார்டு ஆயிருக்குன்னு தெரிஞ்சா ரொம்ப நெர்வஸாயிருச்சு.. யுவன் பாட்டு நல்லா வந்திருக்குன்னு பாராட்டினர். முதல் தடவையாக நான் பாடிய பாடல் திரையில் வர்றதை நினைச்சா சந்தோஷமாத்தான் இருக்கு..” என்றவர் அந்தப் பாடலையும் இரண்டு வரிகள் பாடிக் காட்டினார்..
மேலும் தொடர்ந்த சூர்யா, “நாளை என்னோட பிறந்த நாள். ஆனால் இன்னைக்கு இந்த விழாவே எனது பிறந்த நாள் விழா மாதிரியே நடப்பதா நினைக்கிறேன். சந்தோஷமா இருக்கு. எனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்கள் பெரிய பேனர்கள் வைத்து கொண்டாட வேண்டாம். அந்தக் காசுக்கு கஷ்டப்படுறவங்களுக்கு கொஞ்சம் உதவி செய்தாலே ரொம்பவும் சந்தோஷப்படுவேன். என்னுடைய பிறந்த நாளுக்காக என்னோட ரசிகர்கள் ரத்ததானமெல்லாம் செஞ்சிருக்காங்க… இதுவும் எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் திருப்தியையும் கொடுத்திருக்கு…” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த வி.ஐ.பி.க்கள் அனைவரும் சூர்யாவுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்..