“ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘தி பேமிலி மேன்-2’ தொடரை தடை செய்ய வேண்டும்…” என்று மத்திய மந்திரிக்கு, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.
அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிவரும் வெப் சீரிஸ் தி பேமிலி மேன். இந்தத் தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் தொடரின் முதல் சீஸன் முடிவடைந்து அடுத்த இரண்டாவது சீஸன் துவங்கவுள்ளது. இந்த இரண்டாவது சீஸனில் நடிகை சமந்தா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த இரண்டாவது சீஸனின் டிரெயிலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரெயிலரை பார்த்த தமிழகத்து இளைஞர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். காரணம் இந்த இரண்டாவது சீஸனில் சமந்தா ராஜி என்ற தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பதுதான்.
அதிலும் ராஜி அணிந்திருக்கும் உடைகள் விடுதலைப் புலிகளின் உடையைப் போல இருப்பதும், வசனத்தின் மூலமாக ராஜி ஈழத்தில் இருந்து சென்னைக்கு வந்து இந்தியாவின் மிகப் பெரிய தலைவர் ஒருவரை மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்யவிருக்கிறார் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையடுத்து இந்த வெப் சீரிஸை ஒளிபரப்பக் கூடாது என்று சீமானும், வைகோவும் அறிக்கை வெளியிட்டனர். பல்வேறு தரப்பினரும் இத்தொடர் விடுதலைப் புலிகளின் புகழை களங்கப்படுத்துவதாக புகார் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ் இந்த ‘தி பேமிலி மேன்-2’ தொடரை தடை செய்ய வலியுறுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி பேமிலி மேன்-2’ என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத் தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
நெடிய ஜனநாயக போராட்டக் களத்தில் அவர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அது எந்த வகையிலும் தமிழ் பண்பாட்டின் மதிப்புகளை கொண்டதாக இல்லை. பெருமைமிகு தமிழ் பண்பாட்டை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளை கொண்டது என கருத முடியாது.
எடுத்துக்காட்டாக, தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை பயங்கரவாதியாக காட்சிப்படுத்தி உள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு, இது போன்ற உள் நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.
இந்த தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது, இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம் இது போன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும்.
மேற்கூறிய தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழக தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும்.
இந்த சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள இந்த தொடரை, தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்தத் துரித நடவடிக்கை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும், ஈழப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.