தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகளை வரும் மார்ச் 20-ம் தேதியன்று எண்ணப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதியன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதனால் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணாமல் வைத்திருந்தனர்.
சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை 1 மாத காலத்திற்குள் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தது.
இதையடுத்து தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் இருந்து நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்,
“தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 23.06.2019–ல் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் 23.02.2022 தேதி ஆணைப்படி, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் GOOD SHEPHERD CONVET, எண்.32, கல்லூரி சாலை, சென்னை- 600006 என்ற முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவு அடுத்து வரும் நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவர்களது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.