“அவதூறு செய்திகளைப் பரப்பினால் வழக்கு போடுவேன்…” என்று நடிகை சோனியா அகர்வால் மீடியாக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கன்னட நடிகையான சோனியா அகர்வால் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அந்தச் சோதனையில் 40 கிராம் கஞ்சா அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதால் சோனியா அகர்வாலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் செய்தியை வெளியிட்ட சில மீடியாக்கள் கன்னட நடிகையின் புகைப்படத்திற்குப் பதிலாக தமிழ் நடிகையான சோனியா அகர்வாலின் புகைப்படத்தைக் காட்டிவிட்டன. அதோடு தமிழ் நடிகையான சோனியா அகர்வாலின் வீட்டில்தான் சோதனை நடைபெறுவதாகவும் செய்திகளையும் வெளியிட்டன.
இதைக் கேட்டு கோபமடைந்த சோனியா அகர்வால் தன்னுடைய அதிருப்தியை தனது டிவீட்டர் பக்கத்தில் நேற்றைக்கு வெளியிட்டார்.
அதில், “தீர விசாரிக்காமல் அவசரத்தனமான பொய்யாக ஒருவர் மீது மீடியாக்கள் பழி சுமத்துகின்றன. நான் தற்போது கேரளாவில் புதிய படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன்.

இந்த அவதூறுக்காக சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடு்ப்பேன். இன்று காலை முதலே தொடர்ச்சியான போன் அழைப்புகளும், செய்திகளும் வந்து கொண்டேயிருக்கின்றன. இது எனக்கும், என் குடும்பத்தினருக்கும் மிகுந்த மன வேதனையைத் தருகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.









