full screen background image

“கர்நாடகாவில் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லை..” – நடிகை ராதிகாவின் கோபம்..!

“கர்நாடகாவில் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லை..” – நடிகை ராதிகாவின் கோபம்..!

“டப்பிங் சீரியல்களின் ஆதிக்கத்தினால் தமிழக சின்னத்திரையைச் சேர்ந்த கலைஞர்களும், தொழிலாளர்களும் வேலை வாய்ப்பினை இழக்கும் அபாயம் இருப்பதால், டப்பிங் சீரியல்களை தடை செய்ய வேண்டும்…” என்று கோரி தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

IMG_3100

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகே இந்த அறவழி உண்ணாவிரதப் போராட்டம் நேற்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை படத் தொகுப்பாளர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர் சங்கம் என்று 5 சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட படைப்பாளிகள், கலைஞர்கள், தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

DSC00145

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், “நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்காத இந்த மாதிரியான மாற்று மொழி தொடர்கள் வருவது எந்தவிதத்திலும் நம்முடைய மாநிலத்திற்கும், மக்களுக்கும் நல்லதல்ல.  நானும் சின்னத்திரையில் இருந்து வந்தவன்தான். அதனால் என்னுடைய ஆதரவு என்றைக்கும் சின்னத்திரைக்கு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கம்  இந்த விஷயத்தில் சின்னத்திரை கலைஞர்களுக்கு என்றும் அதரவு அளிக்கும்..” என்றார்.

IMG_6960  

உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்திப் பேசிய சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளரும், நடிகையுமான ராதிகா பேசும்போது, “இது ஒரு முக்கியமான விஷயம். ‘ஹிந்தி கதை மாதிரி, நாமும் எழுதலாமா?’ என்று கேட்டதற்கு. ‘ஹிந்திக்காரங்க என்ன கதை எழுதினாலும் மக்கள் பார்க்கலாம். ஹிந்திக்கார பெண்கள் என்ன உடை அணிந்தாலும் பார்க்கலாம். ஆனால் நம் பெண்கள் அப்படி உடை அணியக் கூடாது’ என்ற ஒரு விவாதத்தை வைத்தார்கள். எனக்கு இது தமாஷாக இருந்தது.

இதைப் போன்றதொரு விஷயம் மேலும் வளரக் கூடாது. தவறை தட்டி கேட்பது என்பது வேறு. நிச்சயம் இதைத் தடுக்க குரல் கொடுப்போம். நீங்கள் இதை இதோடு நிறுத்த வேண்டாம். மிகப் பெரிய அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகள் உங்களோடு உள்ளது.

DSC00150

நீங்கள் அனைவரும் இதை முதல்படியாக எடுத்துக் கொண்டு இன்னும் ஒவ்வொருபடியாக சென்று நீங்கள் போராட வேண்டும்.

கர்நாடகாவில் ஒரு டப்பிங் படமோ அல்லது தொலைக்காட்சி தொடரோ வெளியாக முடியாது. அந்தக் கட்டுப்பாடு நம்மிடம் இல்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்தான் இது. அதற்காக நம் வீடு, சொத்து என எல்லாவற்றையும் எழுதி கொடுக்க சொன்னால் அது சரிபட்டு வராது.

இப்போது மாற்று மொழி தொடர்களை எல்லா தொலைக்காட்சியிலும் ‘prime Time’–ல் ஒளிபரப்பு செய்கிறார்கள். நமது தமிழ் தொடர்களில் நடிக்கும் திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழில் உருவாகும் தொடர்களை மட்டுமே Prime Time-ல் ஒளிபரப்ப வேண்டும். நாங்கள் இதைப் பற்றி பல முறை தொலைக்காட்சி நிறுவனங்களிடம் கூறி விட்டோம்.

IMG_3105

மாண்புமிகு புரட்சி தலைவி முதலமைச்சர் அவர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்களின் சார்பாக இரண்டு முறை நான் அவரிடம் இதைப் பற்றி பேசியுள்ளேன். கண்டிப்பாக அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்.

சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நீங்கள் எங்கே, என்ன மாதிரியான போராட்டம் நடத்தினாலும் நான் அங்கு வருவேன். உங்களுக்காக குரல் கொடுப்பேன். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்று கூறினார்.

உண்ணாவிரதத்தில் நடிகை குஷ்பூவும் கலந்து கொண்டு அவருடைய ஆதரவையும் தெரிவித்தார்.

​தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தை  மாலை 5 மணி அளவில்  கலந்து கொண்ட   அனைவரும்  பழச்சாறு  அருந்தி  நிறைவு செய்தனர்​.

Our Score