பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட் – புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் ஆகிய பட நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க.. ‘கழுகு’ வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘சிவப்பு.’
இந்தப் படத்தில் நாயகனாக நவீன் சந்திராவும் கதாநாயகியாக ரூபா மஞ்சரியும் நடித்திருக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, செல்வா, போஸ் வெங்கட், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், அல்வா வாசு, பூ ராம், சோனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ராஜ்கிரண் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் கோனார் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – மது அம்பாட்
இசை – என்.ஆர். ரகுநந்தன்
எடிட்டிங் – மு. காசி விஸ்வநாதன்
ஸ்டன்ட் – விஸ்வரூபம் டி. ரமேஷ்
நடனம் – தினா
கலை – தேவா
பாடல்கள் – சினேகன்
தயாரிப்பு மேற்பார்வை – டி.ஆர். வாசுதேவன், பி.பாண்டியன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சத்யசிவா.
தயாரிப்பு – முக்தா ஆர்.கோவிந்த், புன்னகைப் பூ கீதா.
படம் பற்றி பேசிய இயக்குநர் சத்யசிவா “இது இலங்கை தமிழர் பற்றிய படம். இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கி குடியுரிமைக்காக ஏங்குகிறவர்களின் வாழ்க்கைப் பதிவுதான் இந்த ‘சிவப்பு’ திரைப்படம்.
இங்கேயேதான் படப்பிடிப்பை நடத்தினோம். இங்கிருந்து ஆஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குத் தப்பிப் போக நினைத்து, முடியாதவர்களின் மன வலி, காதலையும் உள்ளடக்கிய கதை. அகதி மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய சமூகம் அவர்களை பந்தாட நினைக்க, பாதுகாப்பு அரணாக ராஜ்கிரண் கோனார் என்கிற கம்பீர வேடமேற்றிருக்கிறார். இதில் அழகிய காதலும் இருக்கு. அடித்தட்டு மக்களின் வலியும் இருக்கு. படம் பார்க்கிற ஒவ்வொரு மனிதனின் மனதை ஒரு நிமிடம் உலுக்கி விடும் படமே ‘சிவப்பு’. இலங்கை தமிழர்களைப் பற்றிய படமென்றாலும் ஒரு காட்சிகூட இலங்கையில் எந்தவிதமான படப்பிடிப்பும் நடத்தவில்லை.
இந்தப் படத்தைப் பார்த்த பிரபல விநியோகஸ்தரான தேசிகன், ராஜ்கிரணின் நடிப்பில் மயங்கி படத்தை மொத்தமாக வாங்கி தன்னுடைய எஸ்.எஸ்.மீடியா நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது…” என்றார் இயக்குனர் சத்யசிவா.