சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ என்கிற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தில் சான்ட்ரா எமி, யுரேகா, பஜார் பாபு, ரோஜா மலர், காமாட்சி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மகேஷ்வரன், இசை – சிவசரவணன், அனிஷ் யுவானி, படத் தொகுப்பு – வில்சி, கலை – கமல், நடனம் – S.L.பாலாஜி, மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – பி.எம்.பெஞ்சமின், இணை தயாரிப்பு – யுரேகா சினிமா ஸ்கூல், தயாரிப்பு – ஜே.சதிஷ் குமார் (ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – யுரேகா.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் யுரேகா, “சென்னை போன்ற பெருநகரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தங்களின் பணியின் நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர்.
பெருகி வரும் இந்த மனித நெருக்கடியின் நிமித்தமாக, பாரம்பரியமிக்க பாலியல் தொழிலும் மிக மும்முரமாக ரகசியமாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.
தொடர்ந்து வரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகத்தான் இந்த ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். இந்த திரைப்படத்தில் மகிமா எனும் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் சான்ட்ரா எமி தன்னிடம் வந்து சென்ற ஐந்து வாடிக்கையாளர்களை பற்றி எழுத்தாளர் யுரேகாவிடம் பகிர்ந்து கொள்கிறார்.
தன்னிடம் வந்து செல்லும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும், வெறும் உடல் தேவைக்காக மட்டும் வரவில்லை என்பதையும், அவர்களுக்கு தான் ஒரு மனநல மருத்துவராக செயல்பட்டதையும் கூறுகிறார் சான்ட்ரா எமி.
இந்தப் படத்தின் கதைக் களம் இதுமட்டுமல்ல, பாலியல் வன்முறைகளுக்கு எதிரான, நெஞ்சை உருக வைக்கும் இறுதிக் காட்சியும், சென்னைக்கு ஒரு சிவப்பு விளக்கு பகுதி வேண்டுமென்ற சர்ச்சையான கோரிக்கையையும் முன் வைக்கிறது ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ இந்தப் படம்.
துளிக்கூட ஆபாசம் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், தணிக்கை குழுவினராலும், பத்திரிக்கையாளர்களாலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது.
பல விருது பெற்ற திரைப்படங்களை வெளியிட்ட ஜே.சதிஷ்குமாரின் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் வரும் ஜனவரி 20-ம் தேதி இத்திரைப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது…” என்றார்.