ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குநர் எம்.ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் மூவரும் புதியதொரு படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் 9-வது தயாரிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், சிவகார்த்திகேயனுக்கு 13-வது படமாகும். படத்திற்கு இன்னமும் பெயரிடப்படாததால் தற்போதைக்கு, ‘சிவகார்த்திகேயன்-13’, ‘#SK13’ என பெயரிடப்பட்டு இன்று சம்பிரதாயமான பூஜையுடன் துவங்கியது.
இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “எம்.ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை.
மேலும், இயக்குநர் எம்.ராஜேஷின் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்திலும் கொடுப்பார் என நம்புகிறேன்.
மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர்.
எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்கள் இந்தப் படத்தை ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்…” என்றார்.