full screen background image

“பெண்களுக்கு தேவையானதை பெண்களே போராடினால்தான் பெற முடியும்…” – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

“பெண்களுக்கு தேவையானதை பெண்களே போராடினால்தான் பெற முடியும்…” – இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை  நடைபெற்றது.

இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், பி.சி.ஸ்ரீராம், பாலாஜி சக்திவேல், நடிகர் சத்யராஜ், நடிகைகள் ரேவதி, அதிதி மேனன், ரோகிணி, புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, ப்ரேம், விவேக் பிரசன்னா, சுளில் குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

sifwa union

விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசும்போது, “பெண்களுக்காக பெண்களாலேயே உருவாக்கப்பட்ட சங்கம் இது. நமக்காக நாமே பேசுகிறோம்னு நினைக்கும்போது, இந்தச் சங்கத்தை நான் மிகவும் பெருமையாகப் பார்க்கிறேன்.

சமூகத்தில் சாதி, மதம் என்று பல்வேறு பிரிவுகள் இருப்பதை போல் பெண்கள் மீதான தாக்குதல் ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவமாக இயல்பாக இன்றுவரையில் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக் கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள். அவர்களின் வெளிப்பாடாய்தான் இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன்.

pa.ranjith

இந்த சங்கம் நிச்சயமாக ரொம்ப வீரியமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் பெண்கள் மீதான தாக்குதல்.. பாலியல் சுரண்டல்கள் போன்றவற்றைத் தடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.

சமீபத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளான ஒரு பெண்ணை பற்றி வந்த விமர்சனம் என்னவெனில், ‘அவள் ஒழுங்காக ஆடை அணியவில்லை’ என்றார்கள். இப்போது அதிகமாக குழந்தைகளும்தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாங்க. குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கா..? இல்லை.. அதன் நடத்தை காரணமாக இருக்கா…?

IMG_5916

பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்களேதான் காரணம் என்று சொல்றது ரொம்ப இயல்பாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வடிவமாகிவிட்டது. இந்த ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவத்தை நாம் உடைக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும். அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும்தான் பெற முடியும். நமக்கு வரும் பிரச்சனையை இன்னொருவரிடம் சொல்வதே முட்டாள்தனம். உனக்கு பசித்தால் நீதான் சாப்பிட வேண்டும். அதுபோல், இந்தச் சங்கம் பெண்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் சங்கமாக இருக்கும் என நம்புகிறேன்…” என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்.

p.c.sreeram

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசும்போது, “எங்களது பயணத்தில் எப்போதுமே ஒரு பெண் இருந்திருக்காங்க. கௌசிகா, சீதா, யாமினி… இவங்க எப்பவுமே தனித்துவம் வாய்ந்தவங்களாத்தான் இருப்பாங்க. என்னால முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தச் சங்கத்திற்கு நான் செய்வேன். நான் ஏற்கனவே அவர்களிடம் உறுதி அளித்துவிட்டேன்.

அதேபோல் அவங்ககிட்ட ‘நீங்க நூறு பேரை பார்த்திருந்திங்கனா.. அதில் இரண்டு பேர் கண்டிப்பா நிராகரிப்பாங்க. அதனால அதை காதில் வாங்காதீங்க. மிச்சம் இருக்குற தொண்ணுத்தி எட்டு பேர் சொன்ன நல்லதை மட்டும் எடுத்துக்கோங்க’ அப்படின்னு சொல்லிருக்கேன். இந்த சங்கம் பெரிய அளவுல வளரணும். மாற்றத்தை உண்டாக்கும் என்று நம்புகிறேன்…” என்றார் பி.சி. ஸ்ரீராம்.

sathyaraj

விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது,  “சாஸ்திரமும், சடங்கும், பண்பாடும், கலாச்சாரமும் பெண்களை அடிமைகளாகத்தான் வைத்துள்ளது. இவற்றை பாதுகாக்கத்தான் மதம் மற்றும் ஜாதி போன்ற விஷயங்கள் இங்கே உள்ளது.

இவற்றிலிருந்து பெண்கள் வீடுபெற வேண்டுமென்றால் பெண்கள் அனைவரும் தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானால்’ என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். பெண்கள் ஏன் அடிமையாக்கப்பட்டார்கள் என்பது தெரிந்தால்தான் அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியும்…” என்றார்.

இந்த விழாவில் SIFWA இணையத் தளம் துவக்கி வைக்கப்பட்டது. மேலும், ‘திரையாள்’ என்ற காலாண்டு இதழையும் வெளியிட்டனர். 

Our Score