full screen background image

தமிழ் சினிமாவிற்குக் கிடைத்துள்ள புதுமுக நாயகி..!

தமிழ் சினிமாவிற்குக் கிடைத்துள்ள புதுமுக நாயகி..!

ஒரு இசைக் குயில், வெள்ளித் திரையில் நாயகியாக உருவெடுத்திருக்கிறது.

ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி’ படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, ‘பார்ட்டி’ படத்தில் ஜி.எஸ்.டி.,  ‘ஜடா’ படத்தில் அனிருத்துடன் இணைந்து ‘அப்படிப் பாக்காதடி’, ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ‘கண்ணனின் லீலை’ உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய ஸ்வாகதா கிருஷ்ணன்தான் தற்போது திரையில் தோன்றவிருக்கும் புதுமுக நடிகை.

திரைத்துறைக்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டாலும், பின்னணிப் பாடகியாக மட்டுமே உலா வந்தவர் ஸ்வாகதா. ஆனால், அவர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட அடியாத்தே’ என்ற ஆல்பம் அவருக்கு புதிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அந்த ரசிகர்கள் அவரின் குரலுடன் சேர்த்து நடிப்புக்காகவும் கிடைத்தவர்கள்.

ஸ்வாகதா இசையமைத்து, பாடி, நடித்த ‘அடியாத்தே’ பாடலை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா.பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குநர் திரு,அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவான காயல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது.

ஜே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் இயக்குநர் தமயந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில்தான் ஸ்வாகதா கதாநாயகியாக அறிமுகமாகுகிறார்.

சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கருவைக் கொண்ட அழுத்தமான படமாக உருவாகி இருக்கிறது இந்தக் ‘காயல்’ திரைப்படம்.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

“நான் நடிகையாக முழு முதற் காரணம் தனது சகோதரியான நடிகை மாயா கிருஷ்ணன்தான்..” என்கிறார் ஸ்வாகதா. நடிப்பதற்கு உடலையும் மனதையும் தகுதிபடுத்திக் கொள்ளுமாறு சகோதரி சொன்னதைக் கேட்டு அதற்கானப் பணிகளில் இறங்கியிருக்கிறார்.

நடிப்பு ரீதியாக தன்னை செம்மைப்படுத்திக் கொள்ள ஆதிசக்தி லெபாரட்டரி ஆஃப் தியேட்டரில் தன்னை இணைத்துக் கொண்ட ஸ்வாகதா அங்கு பயிற்சி பெற்றார். பின்னர் ஆனந்த் சாமி என்ற தியேட்டர் ஆர்டிஸ்டிடமும் நடிப்பு பழகினார்.

கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ஸ்வாகதா தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமானார்.

அந்த வேளையில்தான், பிப்ரவரி இறுதியில் அவருக்குப்  தமயந்தியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தமயந்தி, ஸ்வாகதாவிடம் நடிக்க விருப்பமுள்ளதா எனக் கேட்டுள்ளார். வாய்ப்பைத் தவறவிடாத ஸ்வாகதா தமயந்தியிடம் கதை கேட்டிருக்கிறார். ஒரு கவிஞரின் கதையில் இசைக் குயில் நடிகையாக ஒப்பந்தமான கதை இதுதான்.

பின்னர், நேரடியாக படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டனர். குறுகிய காலத்தில் கடலோரப் பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்தது. திரைக்குப் புதிது என்பதால் ஆரம்ப நாட்களில் சிறு பதற்றம் இருந்தாலும் இயக்குநர் தமயந்தி தனக்குப் பக்கபலமாக இருந்தால் காயல் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்வாகதா கிருஷ்ணன்.

ஸ்வாகதா மூன்றாவதாக ஒப்பந்தமான ’காயல்’ திரைப்படத்தின் படப்பிடிப்புதான் முதலில் முடிந்திருக்கிறது. மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்புக்காகத் தற்போது காத்துக் கொண்டிருக்கிறார்.

 
Our Score