சிவஞானம் பிலிம் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவஞான ஹரி மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சில்லாட்ட’.
இந்தப் படத்தில் கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார். இதில் இவருக்கு நான்கு ஜோடிகள். டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான ஹமைரா பரத்வாஜ், நதியா. நேசி, ஸ்டெபி ஆகிய நால்வர்தான் அவர்கள்.
மேலும் இதில் முத்துக்காளை, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரநாத், விஜய் கணேஷ், பயில்வான் ரங்கநாதன், வைகாசி ரவி, சுப்புராஜ், பிகில் வேணி, பேபி அக்சயா, கேசவன், ஜோதிராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவஞான ஹரி, மற்றும் சுருட்டு சுடலையாக இயக்குநர் சிவராகுல் இருவரும் மேலும் இரண்டு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
பவர் சிவா, அட்சயா ஆனந்த் நடன பயிற்சியையும், ராம்நாத் படத் தொகுப்பையும், தஷி – வசந்த் இசையையும், லாவண்யா, சீனிவாசன், பாடல்களையும், விஜய் ஜாக்குவார் சண்டை பயிற்சியையும், பகவதி பாலா ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் சிவராகுல்.
படம் பற்றி இயக்குநர் சிவராகுல் பேசும்போது, ‘சில்லாட்ட’ என்ற வழக்குச் சொல் தென் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளதாகும்.
‘சில்லாட்ட’ என்பது பனைமரத்தை சார்ந்தது. பனை மரத்தில் உள்ள ஓலைகளையும் மட்டைகளையும் தாங்கி நிற்கும் வலைதான் ‘சில்லாட்ட’.
அந்த காலத்தில் தண்ணீர், பதனீர் போன்ற திரவ பொருள்களை சல்லடை செய்வதற்கு இந்த சில்லாட்டையையே பயன்படுத்தினார்கள்.
காலபோக்கில் ‘சில்லாட்டை’யையே மக்கள் மறந்து புதுவிதமான செயற்கை சில்லாட்டைகளை உருவாக்கி விட்டார்கள்.
அப்படிப்பட்ட புனிதமான பனை தொழிலை அழித்து செங்கல் சூலையை எழுப்பி, தான் செய்யும் சமூகத்திற்கு விரோதமான தொழிலுக்கு பயன்படுத்துகிறது வில்லன் கோஷ்டி. இதனால் பனை தொழிலை செய்துவரும் நாயகனும் மற்றும் பனை தொழிலையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் நாயகன் மற்றும் வில்லன் கோஷ்டிகளுக்குள் ஏற்படும் மோதல்தான் படத்தின் திரைக்கதை. இறுதியில் வெற்றிபெற்றது யார் என்பதை கிராமிய சூழலில் மண்வாசனை மாறாமல் படமாக்கி இருக்கிறோம்…”என்றார்.
தென் தமிழகத்தில் படமாக்கப்பட்டுள்ள இந்த ‘சில்லாட்ட’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.