தரமான படம் என்றும் – பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் – வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்பபடம் “என்னமோ நடக்குது.” விஜய் வசந்த், மகிமா, பிரபு, சரண்யா என்று நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இந்த படம் அமோக வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் ராஜபாண்டி இயக்குனராக அறிமுகம் ஆனார்.
இதை தொடர்ந்து விஜய் வசந்த் நடிப்பில் ராஜபாண்டி இயக்கும் இரண்டாவது படம் ‘சிகண்டி.’ இதில் நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், சரண்யா, மனோஜ்.கே.பாரதி நடிக்கிறார்கள். ‘என்னமோ நடக்குது’ படத்தை தயாரித்த டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனத்தின் வி.வினோத்குமார்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
படம் பற்றி பேசிய இயக்குநர் ராஜபாண்டி, “இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்க சூரியிடமும் அழுத்தமான – வேறுபட்ட கதாப்பாத்திரம் ஒன்றில் சமுத்திரகனியும் நடிக்க உள்ளார்கள். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
கதையென்று பார்த்தால் பள்ளிக் கல்வி சம்மந்தமாக சில படங்கள் ஏற்கனவே வந்திருக்கின்றன. மேலும் வரலாம். அவர்கள் இதுவரை சொல்லாத விஷயங்களை இதில் சொல்லியிருக்கிறேன். அந்த விஷயங்களை முழுமையாக தருவதற்காக கிட்டத்தட்ட ஆறு மாத காலம் கல்வியாளர்கள் – சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களுடன் ஆலோசித்து உள்ளோம். இதுவரையிலும் கேள்விப்படாத பல முக்கிய தகவல்களை திரட்டியுள்ளோம். அதை வைத்துத்தான் இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம்.
ஒரு இயக்குனராக என் பார்வையில் கல்வியின் தரம் – குறிப்பாக பள்ளிக் கல்வியின் தரம் இப்படியெல்லாம் இருக்கலாமே என்கிற ஆதங்கம் இந்த சிகண்டியில் வெளிப்படும். படம் பார்க்கிற ஒவொருவரும் படத்தில் இடம் பெறும் எதோ ஒரு சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பார்க்க முடியும். படப்பிடிப்பு விரைவில் துவங்கி படம் 2015 மே மாதம் வெளியாகவுள்ளது..” என்றார்.