இந்தத் தகவல் கிடைத்தவுடன் மிகப் பெரிய ஆச்சரியம்..! தமிழ்த் திரையுலகிலும் ‘என்னமோ நடக்குது’ என்பதைக் காட்டியது. பொதுவாக ஒரு படம் நல்லா ஓடினாலும், பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தாலும் அதே இயக்குநருக்கு உடனடியாக ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைப்பது இங்கே குதிரை கொம்புதான்.
ஏனெனில் மேடையில் “எனக்கு வாய்த்த இயக்குநர் அற்புதமானவர். அவரால்தான் இத்தனை வெற்றி…” என்று சொல்லிவிட்டு அன்று மாலையே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் “அவனால எத்தனை செலவாச்சு தெரியுமா..?” என்று அந்த இயக்குநரின் கேரியருக்கு புல்ஸ்டாப் வைக்கும் அளவுக்கு பேசுவார்கள் பல தயாரிப்பாளர்கள்.
இதனாலேயே வெற்றி பெற்ற படங்களின் இயக்குநர்களின் அடுத்தப் படம் வெளிவந்த காலத்தை உற்றுநோக்குங்கள்.. பல மாதங்கள்… ஏன் வருடங்களே இடைவெளியாக இருக்கும்.. ஆனால் இப்போதுதான் வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டிய ‘என்னமோ நடக்குது’ படத்தின் இயக்குநர் பி.ராஜபாண்டி, உடனடியாக அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட்டாராம். அதுவும் அதே தயாரிப்பாளருக்கு.. பாராட்டுக்கள் இயக்குநருக்கு.. வாழ்த்துகள் தயாரிப்பாளருக்கு..
படத்திற்கு ‘சிகண்டி’ என வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார். ‘என்னமோ நடக்குது’ படத்தை தயாரித்த டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
இரண்டு நாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் ‘என்னமோ நடக்குது’ படத்தின் நாயகன் விஜய் வசந்த் நடிக்கிறார். இவருடன் முன்னணி நாயகர் ஒருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார். ஹீரோயின் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம்.
‘என்னமோ நடக்குது’ படத்தை போலவே இதுவும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஆக்சன் படம். நவீன தொழில் நுட்பத்துடன், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க ‘சிகண்டி’ தயாராகிறது. சமூக நோக்குடன் அமைக்கப்பட்ட இக்கதையில் இன்றைய காலகட்டத்தில் தெரிந்தே நாம் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக குற்றத்தை தோலுரித்துக் காட்டும் படமே இந்த ‘சிகண்டி’ என்கிறார் இயக்குனர் பி.ராஜபாண்டி.