‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செவப்பி- ஆஹா ஒரிஜினல்’ ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது!
நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ். அந்த வரிசையில், இப்போது அவர்கள் ‘செவப்பி’ என்ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர்.
குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார்.
மேலும் ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மனோகரன்.எம், படத் தொகுப்பு & வி.எஃப்.எக்ஸ். – வச்சு லட்சுமி, இசை – ஏ.பிரவீன் குமார், ஒலி வடிவமைப்பு – ஷெஃபின் மாயன், கலை இயக்கம் – ஆசைத்தம்பி, சண்டை இயக்கம் – அபிஷேக் ஸ்ரீனிவாஸ், விளம்பர வடிவமைப்பு – ராகவன், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்.
ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரிக்க, எம்.எஸ்.ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
1990-களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்தான் இந்த ‘செவப்பி’யின் கதை.
அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பை போல அந்தக் கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் அச்சிறுவன் வளர்க்கிறான். பாசப் பிணைப்பு ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. இதனால் இரு தரப்பினர்கள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக் கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்த ‘செவப்பி’யின் கதை.
கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் முழு கதையும் வெறும் 27 நாட்களில் படமாக்கப்பட்டது.
ப்ரீ புரொடக்ஷன் கட்டத்தில், பல கிராமவாசிகள் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இயக்குநர் ராஜாவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்தனர். கிராமவாசிகள் ஆசையை நிறைவேற்றவும் கதையின் உண்மைத் தன்மைக்காகவும் அவர்களுக்கும் நடிக்க வாய்ப்பளித்துள்ளது ‘செவப்பி’.
‘செவப்பி’ ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜனவரி 12, 2024 அன்று பொங்கல் பண்டிகைக்கு ப்ரீமியர் ஆகிறது.









