ஸ்ரீசித்ரா பெளர்ணமி பிலிம் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மணிபாய் தயாரித்து, கதை எழுதி, நடித்திருக்கும் திரைப்படம் ‘செந்தா’.
இந்தப் படத்தில் கதாநாயகர்களாக டிட்டோ, ஶ்ரீமகேஷ் நடிக்க கதாநாயகியாக தீபா உமாபதி நடித்துள்ளார். மேலும் வி.மணிபாய், சாம்ஸ், மதுமிதா, அஸ்மிதா, செந்தமிழர, ‘தெய்வ மகள்’ புஷ்பலதா, சாப்ளின் சுந்தர், அபிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன், இசை – டி.எஸ்.முரளிதரன், பாடல்கள் – நா.முத்துக்குமார், ராபர்ட், வி.மணிபாய், சகாயநாதன், படத் தொகுப்பு – புவன், நடன இயக்கம் – பாபி ஆண்டனி, சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், திரைக்கதை வசனம்-செந்தமிழா, கதை தயாரிப்பு – வி.மணிபாய், இயக்கம் – சகாயநாதன்.
இயக்குநர் சகாயநாதன் இதற்கு முன்பு பிரபு சாலமன், ‘மஞ்சப் பை’ ராகவன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் சகாயநாதன் பேசும்போது, “சூர்யா, சிவா இருவரும் நண்பர்கள். இவர்களுடன் படித்த செந்தாமரையும் இவர்களுக்கு உற்ற தோழியாக இருக்கிறாள். சிவாவும் செந்தாமரையும் காதலிக்க இவர்களின் காதலுக்கு உறுதுணையாக இருக்கிறான் சூர்யா. இவர்களின் காதலை செந்தாமரையின் பெற்றோர்கள் ஏற்க மறுக்கவே, சிவாவுடன் பழகுவதை நிறுத்தி விடுகிறாள் செந்தாமரை.
ஆனால், சூர்யாவும் செந்தாமரையும் எப்பொழுதும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். செந்தாமரைக்கு வேறு ஒருவரை மணமுடிக்க பெற்றோர்கள் முயற்சி எடுக்கிறார்கள். முடிவு என்ன என்பதை காதல் ரசம் சொட்டச் சொட்ட சொல்லும் கதையே இந்த ‘செந்தா’ திரைப்படம்.
ஹீரோ, ஹீரோயினை கடத்தி வைக்கும் வில்லன் மற்றும் வில்லன் ஆட்களை மணிபாய் துவம்சம் செய்யும் செயயும் ஒரு சண்டைக் காட்சி பாண்டிச்சேரி சுதேசி மில்லில் ஏராளமான சண்டைக் கலைஞர்களுடன் படமாக்கப்பட்டது.
நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ‘ஆயிரம் பூக்கள் ஒன்றாய் கூடி பெண்ணாய் மாறியதோ…’ எனும் மனதை வருடும் பாடலும், ‘புன்னகையில் பூப்பறிக்கும் காதல்…’ எனும் பாடலும், ‘கட்டு கட்டு கமரக்கட்டு…’ எனும் துள்ளல் இசை பாடலும் கேட்போரை கிரங்கடிக்கும்.
பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், சென்னை போன்ற இடங்களில் 40 நாட்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்றது…” என்றார்.
படம் விரைவில் வெளிவர உள்ளது.