கவிஞரும், பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகனை நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார்.
உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.
இச்சந்திப்பின்போது இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கிக் கூறுகையில்:
“ஒரு குழந்தை 8 வயது வருவதற்குள் உடல் ஆரோக்கியத்திற்காக 35 தடுப்பூசிகளுக்கு மேல் போடுகிறோம்.
அதுபோல, அவர்களின் மன ஆரோக்கியத்திற்கும், ரசனை வளர்ச்சிக்கும் இந்த சினிமா ரசனை கல்வி ஒரு முக்கியத் தடுப்பூசியாக இருக்கும்.
இது பிஞ்சு மனங்களிலே நஞ்சு கலக்காமல் தடுத்து, கிராமப்புற எளிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் அசல் சினிமாவை அறிந்து, தர்க்கபூர்வமான சிந்தனையாளர்களாக வளர வழிவகுக்கும்.
இந்த பரந்த பாரத தேசத்தின் குழந்தை மனங்களில் நல் உணர்வுகளை பிள்ளை பிராயத்திலேயே வளர்க்க சினிமா ரசனை கல்வி பெரிதும் உதவும்” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி தொகுத்துள்ள உலகத் தரம் வாய்ந்த சிறார் திரைப்படங்களின் விவரங்களையும், நூலின் உன்னத நோக்கத்தையும் மிகுந்த சிரத்தையோடு கேட்டு அறிந்த அமைச்சர் எல்.முருகன் பெரிதும் மகிழ்ந்தார்.
“இத்தகைய முயற்சி நம் நாட்டுக்கு மிக முக்கியமானது. இதன் மூலம் நம் நாட்டு குழந்தைகளுக்கு மிகப்பெ ரிய நன்மையை நாம் செய்வோம்” என்று பாராட்டினார் மத்திய அமைச்சர்.
அமைச்சர் மேலும் பேசுகையில், “ஒட்டு மொத்த இந்தியக் குழந்தைகளும் பயனடையும் வகையில், இந்நூலை இந்தியாவின் முக்கிய 25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும், ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்யும்..” என்று வாக்குறுதி அளித்து வாழ்த்தினார்.
மத்திய அரசின் இந்த மகத்தான அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, “சினிமா ரசனை கல்வி இந்தியா முழுக்கச் செல்வதற்கு, ஒட்டு மொத்த இந்தியக் குழந்தைகளின் கரங்களால் அமைச்சரின் கரங்களைப் பற்றி நான் என் நன்றியைக் கூறினேன்” என இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.









