full screen background image

“அநீதிக்கு எதிராகப் பொங்குவதற்குப் பெயரும் நேர்மைதான்” – திரைப்பட விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு..!

“அநீதிக்கு எதிராகப் பொங்குவதற்குப் பெயரும் நேர்மைதான்” – திரைப்பட விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு..!

இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘இணைய தலைமுறை.  

கல்லுாரி தேர்தல் சம்பந்தப்பட்ட கருவை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் புதுமுகங்களான அஸ்வின் குமார் ஹீரோவாகவும், மனிஷா ஜித்  ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று மதியம் வடபழனி ஆர்.கே.வி. தியேட்டரில் நடந்தது. விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ்.,  மற்றும் இயக்குநர்கள் தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரகனி உட்பட பலர் கலந்துகொண்டனர். சகாயம் ஐ.ஏ.எஸ். படத்தின் பாடல்களை வெளியீட்டு பேசினார்.

DSC_0567

அவர் பேசும்போது, “2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கணினி துறையில் பணியாற்றும் பல இளைஞர்கள் குதித்தார்கள்.  நாம் நம்பியிருக்கும் தலைவர்கள் தேசத்துக்கு,  நம் மேம்பாட்டுக்கு உழைப்பார்கள் என்று நம்பி ஆதரவு தருகிறோம். ஆனால், அவர்கள் தங்களை வளப்படுத்தவே கவனம் செலுத்துகிறார்களே என்று ஊழலுக்கு எதிராக கோபம் கொண்ட இளைஞர்கள் அவர்கள். அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஊழலுக்கு எதிராக போட்டியிட்டவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான இளந்திருமாறன்.

நாம் பிறந்த இந்த சமூகத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அக்கறையில் பணியாற்றினார். அப்போது நான் அந்த பகுதியில்தான் குடியிருந்தேன். கலால் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இளந்திருமாறனை பார்த்ததுகூட இல்லை. ஆனாலும், ஊழலுக்கு எதிராக களம் இறங்கியவர் என்ற காரணத்தினால் நானும், என் மனைவியும் அப்போதைய தேர்தலில் அவருக்குத்தான் ஓட்டு போட்டோம். அவர் வெற்றி பெறுவாரா..? டெபாசிட் வாங்குவாரா..? என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஊழலுக்கு எதிராக நிற்பதால் ஓட்டு போட்டேன். 

பின்பு 2011-ல்தான் இவரை சந்தித்தேன். 2009-ல் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு பின் நான் மனதளவில் நொந்துபோய் இருந்தேன். தொன்மை, வரலாறு வாய்ந்த நம்முடைய தமிழ் சமூகம் ஈழத்தில் 2 லட்சம் உறவுகளை இழந்தது. 21-ம் நுாற்றாண்டில் எந்த சமூகமும் சந்திக்காத இழப்பை சந்தித்த அந்தச் சமயத்தில் தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,  பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், படைப்பாளிகள் என்று எல்லோருமே இருந்தார்கள். ஆனால்  நல்ல தலைவர்கள் இல்லையே என்று அப்போதுதான் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.  

பல ஆயிரம் பெண்கள், அப்பாவி குழந்தைகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசியதால் கருகினார்கள். கேட்க நாதி இல்லை. கொதித்து போனேன். அது வெறி அல்ல, நெறி. நேர்மை என்பது கடன் வாங்காதது மட்டுமல்ல, லஞ்சத்துக்கு எதிரானது மட்டும் நேர்மை அல்ல. இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான்.

DSC_0551

பின்னர் ஒரு கட்டத்தில் என்னிடம் வந்து பேசிய இளந்திருமாறன், ‘உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று எனக்குத் தெரியும். நீங்கள் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உங்கள் பணியைவிட நேரிடும். 8 ஆண்டுகள் சம்பளம் கிடைக்காது. அந்த 8 ஆண்டுக்கான உங்களது சம்பளத்தை அது எத்தனை லட்சமாக இருந்தாலும் பரவாயில்லை. அதை நான் தருகிறேன். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்…’ என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ‘முதலில் சமூக மாற்றங்களை உருவாக்குவோம். அரசியல் என்பது சமூகத்தின் அம்சம். அதன் வெளிப்பாடு. ஒரு நாட்டிலே வேளாண்மை, கல்வி மாதிரி அரசியலும் ஒன்று. சமூகத்தை துாய்மைப்படுத்தினால் அரசியலும் துாய்மை ஆகிவிடும்’ என்றேன்.

இளந்திருமாறன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். மாணவர்கள் என்றாலே ஒருவிதமானவர்கள் என்று நினைக்கலாம். அவர்கள் குறும்புமிக்கவர்கள். அவர்களிடம் அளப்பறிய சக்தி இருக்கிறது. அவர்கள் கல்லுாரி தேர்தலை பற்றி அங்கே நடக்கிற தில்லுமுல்லுக்களைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. மாணவர் தேர்தல் தில்லுமுல்லு மட்டுமல்ல, மாநிலத்தில் நடக்கும் தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்கும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

இதேபோல் இயக்குநர் சமுத்திரகனியும் ஒரு திரைப்படத்தை தற்போது தயாரித்து உருவாக்கியிருக்கிறார். கல்வி வணிக மயமாகியது.. பிள்ளைகளின் தற்போதைய கல்வி முறை, குழந்தைகள் மீது பெற்றோர்களின் ஆசை திணப்பு பற்றிப் பேசும் அந்த ‘அப்பா’ என்ற திரைப்படத்தை நான் சமீபத்தில் பார்த்தேன். அற்புதமாக படைத்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி எடுத்திருக்கிறார். அந்தப் படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்…” என்றார்.

Our Score