தமிழ்ச் சினிமாவில் 800 படங்களுக்கும் மேல் நடன இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் நடன அமைப்பாளர் ஸ்ரீதர், தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். ‘சாவடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் இன்று ஏவி.எம். ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் இயக்குநர் ஸ்ரீதரே கதாநாயகனாக நடித்து இயக்குகிறார். ஹீரோயினாக ஷில்பா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன், பின்ட்டு பாண்டு, ஜித்தேஷ், தீரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா, இசை – பிரவீன் சால்வி, படத் தொகுப்பு – ஜி.சந்திரகுமார், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், உடை வடிவமைப்பு – சாய் நரேஷ், கலை இயக்கம் – ராகவன், புகைப்படங்கள் – ஏ.ஆர்.முருகன், ஒப்பனை – சேகர், பாடல்கள் – லோகன், டிசைன்ஸ் – Wezigns, பி.ஆர்.ஓ. – சி.என்.முருகன், தயாரிப்பு – லிபி சினி கிராப்ட்ஸ், வி.என்.ரஞ்சித் குமார். எழுத்து, இயக்கம் – ஸ்ரீதர். V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும் 3-வது படம் இது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீதர் கூறுகையில், “இன்றைய காலத்தில் செல்போன் எப்படி தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டதோ, அதேபோல் இளைஞர்கள் மத்தியில் பைக்கும் ஒன்றிவிட்டது. குறிப்பாக ஸ்ட்ரீட் ரேஸ் பைக் என்றால் இளைஞர்களுக்கிடையே தனி உற்சாகமே வந்துவிடும்.
இந்த படம் அந்த பைக் ரேஸிற்கு ஆசைப்படும் இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. சாலைகளில் பைக்கில் வேகமாக செல்லும் இளைஞர்கள் அதன் பின் விளைவுகளை பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றிய கதையே இந்த படம்.
இப்படி ஒரு விழிப்புணர்வு சார்ந்த படத்தை இயக்க என்னை தூண்டியது என் கண் எதிரே நடந்த விபத்து ஒன்றுதான் காரணம். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 7 வருட காலம் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களுடன் என்னுடைய நேரத்தை செலவழித்திருக்கிறேன்.
இந்த படத்துக்காக மொத்தம் 50 இளைஞர்களை நான் தேர்வு செய்து வைத்திருந்தேன். அதில் டில்லி கணேஷ் என்ற இளைஞர் நிஜமாகவே பைக் ரேஸின்போது விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார் என்ற தெரிந்தபோது மிகவும் வருந்தினேன்.
45 முதல் 50 நாட்கள்வரை இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். வருகிற 18-ம் தேதி தொடங்கி ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இப்படம் வரும் ஜூலையில் திரைக்கு வரும்..” என்றார்.