full screen background image

மூன்றுவித கெட்டப்புகளில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ரூட் நம்பர் 17’

மூன்றுவித கெட்டப்புகளில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ரூட் நம்பர் 17’

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர்-17’.

இந்த ‘ரூட் நம்பர்-17’ படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றுபவர். இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ஹரிஷ் பேரடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விஸ்வநாதன், டைடஸ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசேப்பசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கு.கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

தெலுங்கில் த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஜாக்கி ஜான்சன் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இந்தப் படத்தின் சவுண்ட் கிராபிக்ஸ் மற்றும் சவுண்ட் டிசைன் ஆகியவற்றை ராஜகிருஷ்ணன் உள்ளிட்ட காந்தாரா படத்திற்கு பணியாற்றிய குழுவினர்தான் வடிவமைத்துள்ளார்கள்.

படம் பற்றி இயக்குநர் அபிலாஷ் பேசும்போது, “காட்டோடு சேர்ந்த பாதை என்பதுதான் இந்த படத்தின் தலைப்புக்கான அர்த்தம். முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு பாதை இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த பாதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்கள் எல்லாம் அன்றிரவே மரணத்தை தழுவுகிறார்கள். இதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காரணம் ஒன்று இருக்கிறது.

1990 முதல் 2020 வரை மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் 30 வருட பழி வாங்கல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. அதற்கேற்ப நாயகன் ஜித்தன் ரமேஷும் மூன்று வித கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதில் 90 கிலோ எடையுள்ள ஒரு வித்தியாசமான கெட்டப்பும் உண்டு. இதற்காக தேசிய விருது பெற்ற ஒப்பனை கலைஞரான ரஷீத் அஹமதுவும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்.

அகிலேஷ் மோகன் படத் தொகுப்பு செய்கிறார். பிரசாந்த் பிரணவம்  ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த கதை மூன்றுவித காலகட்டங்களில், அதேசமயம் அடர்ந்த காடு, மிகப் பெரிய குகை, வறண்ட சமதள பகுதி என மூன்றுவிதமான இடங்களில் நடைபெறுகிறது. இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம். 

இந்த படத்தில் செந்தமிழ் தாசன் என்கிற கவிஞரை அறிமுகப்படுத்தியுள்ளோம். கவிஞரான இவர் முதன்முறையாக சினிமாவிற்கு பாடல் எழுதியுள்ளார். பின்னாளில் பெரிய பாடலாசிரியராக இவர் வலம் வருவார் என்பது உறுதி. ஸ்வேதா மோகன் ஒரு தாலாட்டு பாடலை பாடியுள்ளார். நிச்சயம் இதற்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் பிராங்கோ மற்றும் லவ் மேகிங் பாடல்களைப் பாடும் ரீத்தா தியாகராஜன் ஆகியோரும் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்தப் படத்தின் கதை களம் தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்கிறது. படப்பிடிப்பை கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளோம்.

அது மட்டுமல்ல இந்தப் படத்திற்காக 5500 சதுர அடியில் பூமிக்கு அடியில் ஒரு மிகப் பெரிய செட் அமைத்து 28 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இதுவரை சினிமாவில் யாரும் இப்படி ஒரு செட் போட்டது இல்லை. ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஆந்திராவில் உள்ள ‘கண்ணவம்’ என்கிற இடத்தில் இந்த குகை செட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் இந்த செட்டை பார்ப்பதற்கே பொதுமக்கள் நிறையபேர் வருகை தந்தனர்.

அதுமட்டுமல்ல, தென்காசி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். யானை, புலி உலாவும் அச்சுறுத்தல் கொண்ட அந்த காட்டிற்குள் மாலை 6 மணிக்கு மேல் யாரும் நுழைய மாட்டார்கள். ஆனால் நாங்கள் இரவு 9 மணிவரை படப்பிடிப்பு நடத்தினோம். எங்களது படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே ஒரு திருவிழா மாதிரி, ஒரு ஜாலியான சுற்றுலா சென்று வந்தது மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படத்தின் முதற்பார்வையை நடிகர் ஜீவாவும், இரண்டாம் பார்வையை நடிகர் ஆர்யாவும் வெளியிட்டனர். இப்பார்வைகள் இப்போது வைரலாகி வருகிறது.

ஜனவரியில் இதன் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும்விதமாக தயாராகி வருகிறது” என்றார்.

Our Score