ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் திரைப்படம் ‘றெக்கை முளைத்தேன்’.
இந்தப் படத்தில் தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், மீரா கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்திற்கு தரண்குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை பிஜு வி. டான்போஸ்கோ கையாளுகிறார். பாடலுக்கான இசையை தீசன் வழங்கி உள்ளார். கலை இயக்கம் : பிரேம், ஸ்டில்ஸ் : சி.எச். பாலு, ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா பிரபுm தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் துரை, தயாரிப்பு மேலாளர்: அமிர்தராஜ் மற்றும் சுரேஷ், விளம்பர வடிவமைப்பு: சிவகுமார்.
’சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடருக்கு பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கிராமத்து நட்பு, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், ‘சத்ரியன்’ படத்தில் ஆக்ஷன், ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தில் கிராமத்து வீரம் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், இந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார்.
இதுவரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார்.
இந்த ‘றெக்கை முளைத்தேன்’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், “இத்தகைய படங்களைத்தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடுதான் இந்த ‘றெக்கை முளைத்தேன்’ திரைப்படம்.
கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம்… அதிர வைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம்… என்று தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும்” என்றார்.
ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கியுள்ள ‘றெக்கை முளைத்தேன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் வகையில் புதிய தடத்தை பதிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.









