full screen background image

“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்

“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்

பல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்.

இந்தப் படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகைகள் சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, ஆகியோருடன் ‘விஜய் டிவி’ புகழ் இர்பான் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரேம் இந்த படத்தின் படத் தொகுப்பை மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார்.

தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, தனது பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இந்தப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ‘மழை’ படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குநர்கள் வசந்தபாலன், சரண், பத்மாமகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

“வீட்டின் நடு செங்கல்லையே உருவி விடுவார் இயக்குநர்” 

Raajavukku Check-Stills-2

இந்த விழாவில் இயக்குனர் சரண் பேசும்போது, “பல வருடங்களுக்கும் மேலாக சேரனுக்கும் எனக்கும்  நெருங்கிய நட்பு உண்டு. எனது பெயருக்கும் அவர் பெயருக்கும் குழப்பங்கள்கூட ஏற்பட்டுள்ளது.. என் படத்தை பார்த்து திட்டி எழுதிய  கடிதங்கள் எல்லாம் அவருக்குப் போய்விடும். அவர் படத்தை பாராட்டி அவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் எனக்கு மாறி வந்ததெல்லாம் நடந்துள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநரான சாய் ராஜ்குமார் என்னிடம் துணை இயக்குனராக ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்திலிருந்து ‘ஜெமினி’ படம்வரையிலும் பணியாற்றியவர். ஒரு கதையைப் பற்றி அவரிடம் தைரியமாக நாம் விவாதிக்கலாம். அந்தக் கதையில் உள்ள பிளஸ், மைனஸ்களை சரியாக கண்டுபிடிப்பார். நான் இயக்கிய படங்களில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தது என்றால் அதற்கு சாய் ராஜ்குமாரும் மிக முக்கியமான ஒரு காரணம்.

ராஜ்குமார் என்னிடமிருந்து விலகி தனியாக படம் இயக்க சென்றதிலிருந்து என்னுடைய படங்களில் ஒரு கதையை சீரமைக்கும் ஸ்கிரிப்ட் டாக்டர் என்கிற விஷயம் சரியாக அமையாமல் போனது. அப்போதுதான் அவருடைய அருமை எனக்கு நன்றாகவே தெரிந்தது. தற்போது நான் இயக்கியுள்ள ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் டிஸ்கஷனுக்குக்கூட அவரைத்தான் நான் அழைத்தேன்.

IMG_6877

ராஜ்குமாரை பொறுத்தவரை எப்போதுமே அவர் நாம் உருவாக்கி வைத்திருக்கிற ஒரு ஸ்கிரிப்டில் இருந்து அதைப் புரட்டிப் போடுகிற மாதிரி, ஒரு வீட்டின் நடு செங்கல்லையே உருவுகிற மாதிரி ஒரு விஷயம் சொல்வார். அதன்பிறகு அந்த கட்டடத்தை கட்டி எழுப்பும்போது வெறும் வீடாக இருந்த கதை ஒரு நல்ல பங்களா போல மாறி இருக்கும்.

அந்த வகையில் இந்தப் படத்தை நான் பார்த்தபோது இது பேசப்படக் கூடிய ஒரு படமாக உருவாகியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்தப் படத்தில் அவர் ஒரு சவாலை மேற்கொண்டுள்ளார். அது இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத, எடுக்காத ஒரு சவால். அந்த சவாலுக்கு உறுதுணையாக அவருக்கு கூடவே நின்றுள்ளார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு. இந்த படம் வெளியான பிறகு இவர்கள் இருவருடைய உழைப்பும் ரொம்பவே பாராட்டப்படும்…” என்றார்.

“நெருப்பாக நின்று தன்னை நிரூபித்த சேரனுக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும்”  

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது, “எனக்கு குழந்தை பிறந்த தருணத்தில் மட்டுமல்ல, அதன் பிறகு பல நாட்கள்வரை ஒரு நான் ஒரு அப்பா ஆகிவிட்டது போல உணர்ந்ததே இல்லை.. ஆனால் ஒருமுறை என் குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனையில் என் கைகளில் மூன்று மணி நேரம் தூக்கி வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தபோதுதான் நான் என்னை ஒரு அப்பாவாக முழுமையாக உணர்ந்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமல்ல, சந்தோஷமும் பீரிட்டு வந்தது.

vasantha balan

அந்த வகையில் சேரன் சார் தனது படங்களில் காதலனாக நடிக்கும்போதுகூட தன்னை அப்பாவாக காட்டுகிற ஒரு நடிகர் என்றுதான் சொல்வேன். இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது. தன் இதயத்தையும், ஆன்மாவையும் திறந்து இந்த உலகத்தின் முன்னால்  துணிச்சலாக நிற்கிற தைரியம் எனக்குக்கூட கிடையாது. ஆனால், தன் வாழ்க்கையில் மிகக் கஷ்டமான சூழல்களில் தன்னை ஒரு அப்பாவாக இதயத்தைத் திறந்து தன்னை நிலைநாட்டிக் கொண்ட ஒரு மிக உன்னதமான மனிதர்தான் சேரன்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் சேரன் கலந்து கொள்ள உள்ளே சென்று விட்டார் என்று என் மனைவி சொன்னதும் எனக்கு பதட்டமாக இருந்தது. ‘பாரதி கண்ணம்மா’வும், ‘பொற்காலமும்’, ‘ஆட்டோகிராப்பும்’ எடுத்த உன்னதமான கலைஞன் இவ்வளவு அலைக்கழிக்கப்படுகின்ற ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதுவே ஐரோப்பாவில் செய்திருந்தால், ஒரு தீவையே அன்பளிப்பாக கொடுத்து நிம்மதியாக இருங்கள் எனக் கூறியிருப்பார்கள். ஆனால் அவருக்கு வேறு வழி இல்லை.. அதனால் பிக்பாஸில் போய் நிற்கிறார். அதனாலேயே நான் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பதட்டத்துடனே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், எல்லா சூழலையும் நேர்மையான நெஞ்சுரத்துடன் உலகத் தமிழர்கள் முன்பாக நான் உண்மையானவன் நேர்மையானவன் எனது எனம் திறந்து காட்டினார் சேரன். கற்பை நிரூபிப்பது போல நிஜமாகவே நூறு நாட்கள் நெருப்பில் நின்று தனது நேர்மையை நிரூபித்து வெளியே வந்ததற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும்…” என்றார்.

“இந்தக் கதாபாத்திரத்திற்குள்ளே நுழையவே எனக்கு பல நாட்கள் ஆனது.”

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ள இர்பான் பேசும்போது, “2017-ல் இருந்து எனக்கு சரியான பட வாய்புகள் இல்லாதபோது நான் படம் இயக்க செல்லலாம் என நினைத்திருந்த வேளையில்தான் இயக்குநர் சாய் ராஜ்குமார், இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னார்.

irfaan-1

அவரிடம் ‘இனி நான் நடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன்’ என்று கூறினேன். ஆனால், என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார். என்னுடைய கண்ணோட்டத்திற்கு எட்டாத ஒரு கதாபாத்திரத்தை இதில் எனக்கு கொடுத்துள்ளார்.

சின்ன வயதில் இருந்தே இப்படித்தான் பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என நாம் பழக்கப்பட்டிருப்போம். ஆனால் இதில் உச்சபட்சமாக அவற்றையெல்லாம் தாண்டி நடிக்க வேண்டிய சூழலில் தான் நடித்துள்ளேன். இந்தக் கதாபாத்திரத்திற்குள்ளே நுழையவே எனக்கு பல நாட்கள் ஆனது. ஆனால் டப்பிங்கில் பார்த்தபோது எனது கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது தெரிந்தது…” என்றார்.

“இதுவரை எந்த நடிகையும் நடித்திருக்காத காட்சியில் நடித்திருக்கிறேன்”

படத்தின் நாயகியான சிருஷ்டி டாங்கே பேசும்போது, “எப்போதுமே ஒரு படத்தில் கதைதான் ராஜா. இந்த படமும் அப்படித்தான். இந்த படத்தில் நான் நடிப்பதற்கும் அதுதான் காரணம்.

srusti dange

இன்றைய தேதியில் பெண்கள் தங்கள் வாழ்க்கை குறித்து, சுதந்திரம் குறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும்விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் இந்த படத்தில் நான் நடித்துள்ள ஒரு சவாலான காட்சியை இதுவரை தமிழ் சினிமாவில் ஒரே ஒருவரைத் தவிர யாருமே நடித்ததில்லை என்று உறுதியாக சொல்வேன்.

சேரன் சார் அப்போதும் இப்போதும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும் ஒரு நபர்.. அவருடன் நடித்தது எனது அதிர்ஷ்டம்.. இந்த படத்தின் வில்லன் இர்பானால், நான்கு நாட்கள் நான் மருத்துவமனையில் இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது…” என்றார்.

“படம் பார்க்க பெண் குழந்தைகளை அழைத்து வாருங்கள்”

இயக்குநர் சேரன் பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்த என்னைவிட மற்ற அனைவருமே இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். காரணம், நான் தேவையான அளவுக்கு வெற்றி, பெயர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். ஆனால் இந்த உலகத்தில் பாராட்டுக்களை எதிர்நோக்கி அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர் கூட்டம்தான் இங்கே… இந்தப் படத்தில் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

IMG_6875

குடும்பத்திற்கான திரில்லர் படமாக இது அமைந்துள்ளது. உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் இந்தப் படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அவர்களையும் அழைத்து வந்து இந்தப் படத்தை காட்ட வேண்டும். அது அவர்களுக்கு ஒரு பத்து புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொன்னதற்கு சமமாக இருக்கும்.

இந்த வாழ்க்கை சூழலில், இன்றுள்ள சமூகத்தில் எந்த மாதிரியான வாழ்க்கையில் நாம் இருக்கிறோம், நமக்கான அபாயங்களும் நமக்கான பிரச்சனைகளும் நம் கூடவே நடந்து வந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.. அப்படி ஒரு பெற்றோராக, அவர்களின் பிரதிநிதியாகத்தான் நானும் இருக்கிறேன்.

நாம் எந்த தருணத்தில் அப்பாவாக உணர்கிறோம் என்பதை இந்தப் படம் அழகாக சொல்கிறது.. நான் பல தருணங்களில்  என்னை ஒரு அப்பாவாக உணர்ந்திருக்கிறேன்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதுகூட அங்கே ஒரு அப்பாவாக வாழ வேண்டிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  அதிலும் நான் உண்மையாக, நேர்மையாக என்னுடைய சொந்த மகளைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்துக் கொண்டேன். அதில் எந்த பாசாங்கும் இல்லை. அந்த விளையாட்டிற்காக அப்படி நடக்க வேண்டிய எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை. அந்தப் பாசத்தை நான் பொய்யாக காட்டினால், இந்த உலகத்தில் வாழ்வதற்கே எனக்கு அருகதை கிடையாது.

படம் பார்க்கும் பார்வையாளர்கள் இந்தப் படத்தின் கதாபாத்திரத்துடன் தங்களை ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்திக் கொள்வதுபோல இந்த படம் இருக்கும். படம் பார்த்து முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது யாரோ ஒருவருடைய கரத்தைப் பற்றிக் கொள்ளத் தேடுவீர்கள்..

அது உங்களுடைய மகளுடைய, மகனுடைய, மனைவியுடைய, யாரோ ஒருவருடைய கரமாக இருக்கலாம்.. உறவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.. உங்கள் உறவுகளிடம் இருந்தும் அவர்கள் ஏற்படுத்தும் தொல்லைகள், பிரச்சனைகளிலிருந்தும் அவை கொடுக்கும் அனுபவங்களிலிருந்தும் தயவு செய்து விலகி நின்று விடாதீர்கள்.. கூடவே சேர்ந்து பயணியுங்கள்.

இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு சற்று கஷ்டமாகவும், அதேசமயம் சவாலாகவும் இருந்தது.. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு இன்னொரு இணை இயக்குநர் போலவே பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நிறைய தியேட்டர்கள் கொடுக்க வேண்டும். அதிகக் காட்சிகள் குறிப்பாகக் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கும்விதமாக மாலை நேரக் காட்சிகளை ஒதுக்கவேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு ஆதரவாக வெளியில் இருந்து பேசியவர்களில் இங்கே வந்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்த கருத்துக்கள் அங்கே உள்ளே இருக்கும்போதே என் காதுகளுக்கு வந்தது.

வெளியே வந்த பிறகும் அதை நான் பார்த்தேன். என் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் மட்டுமே அவர் அப்படி பேசியிருக்கிறாரே தவிர அதில் வேறு ஒன்றுமில்லை.. அக்கறை உள்ளவர்கள்தான் நம் பக்கத்தில் வந்து நிற்பார்கள்.. மற்றவர்கள் பார்த்து சிரித்துவிட்டு போய்விடுவார்கள்.

தமிழ் சினிமாவில் புதுப்புது படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்..  சமீபத்தில் ‘அசுரன்’ படத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். அந்தப் படத்தை அருமையாக படைப்பாக்கம் செய்திருக்கிறார்கள்.

கமர்சியல் படங்களில் நடித்து வரும் ஒரு நடிகன் எப்படி 50 வயது மனிதனாக தன்னை மாற்றிக் கொண்டு அற்புதமாக நடிக்க முடிகிறது..? அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்.? அந்த மாதிரியான படங்களை தருவதற்கு இங்கே நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள்..

ஆனால் இங்கே படங்களை வியாபாரம் செய்வதில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் ‘ஒத்த செருப்பு’ படம் வெளியானது. பார்த்திபன் அருமையான படைப்பாளி. அதுபோன்ற திரைப்படங்கள் மக்களை அதிகம் சென்றடைய வேண்டுமே என்கிற ஏக்கம் அவரைப்போலவே பலருக்கும் இருக்கிறது. அது போன்ற ஒரு திரைப்படம்தான் இந்த ‘ராஜாவுக்கு செக்’ படமும்…” என்றார்.

“சேரன் சேரப்பாவாக மாறியது என் நல்ல நேரம்”  

இயக்குநர் சாய் ராஜ்குமார் பேசும்போது, “இயக்குநர் வசந்த், சரண் ஆகியோரிடம் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். சரண் சார் சொல்வது போல நான் பெரிய விஷயம் எல்லாம் செய்துவிடவில்லை. ஒரு உதவி இயக்குநராக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நான் செய்தேன்.

இந்தப் படம் எனக்குக் கிடைப்பதற்குக் காரணம் ‘அம்முவாகிய நான்’ படத்தை இயக்கிய இயக்குநரான பத்மாமகன்தான்.. அவருக்கு வந்த ஒரு வாய்ப்பைத்தான் அவர் எனக்கு திருப்பிவிட்டு, இன்று என்னை இந்த மேடையில் நிற்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளார்.

IMG_6885

இத்தனை வருடங்கள் கழித்து படம் இயக்க வந்தாலும் அது பற்றி எதுவும் கேட்காமல் நான் சொன்ன கதையை ரசித்து இந்தப் படத்தினை இயக்கும் வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்களுக்கு ரொம்பவும் நன்றி. வேறு எதிலும் குறுக்கிடாமல், எல்லா முடிவுகளையும் நானே எடுக்கும் முழு சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார்கள்.

இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பின்பு, இதில் எங்கள் வசதிகளுக்கு உட்பட்டு என் மனதில் தோன்றிய முதல் நபர் சேரன்தான். ஆனாலும் முதல் முயற்சியிலேயே அது செட்டாகவில்லை. இருந்தாலும் நான் பிடிவாதமாக சேரன் சார்தான் நடிக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்தேன்.

காரணம், அப்பா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதாலும் அவரை எளிதாக ஒரு அப்பாவாக ரசிகர்கள் பொருத்திப் பார்த்துக் கொள்வார்கள் என்பதாலும்தான் இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன்.

என் நல்ல நேரமோ என்னவோ தெரியவில்லை, சேரன் சார் இப்போது உலகமறிந்த சேரப்பாவாக மாறிவிட்டார்.. அதன் பிறகு அவர் மீதான கண்ணோட்டமே மாறிவிட்டது.. அப்பா பொண்ணு கதைக்கு சேரன்தான் சரி என  நாங்கள் செய்த முடிவு தீர்க்கதரிசனமாக மாறிவிட்டது. ஆனால், இந்தப் படத்தை ஆரம்பித்தபோது இதில் சேரன் எப்படி செட் ஆவார் என்றுகூட சிலர் கேட்டார்கள்.

ஆனால், ‘பாட்ஷா’ படத்தில் எப்படி ரஜினி சாரை தவிர்த்துவிட்டு வேறு யாரையுமே அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியாதோ, அதேபோல இந்தப் படம் வெளியான பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் சேரனை தவிர்த்து வேறு யார் நடித்திருந்தாலும் அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்பதை நீங்களே உணர்வீர்கள்.

அதுமட்டுமல்ல… இந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கு மிகப் பெரிய பிரச்சனை ஒன்றும் இருந்தது. ஆனால் அதை இங்கே சொன்னால் படத்தின் முக்கியமான அம்சமே வெளியாகிவிடும் என்பதால், நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

இந்தப் படத்தில் பல காட்சிகளில் அவர் ஒரு தனி நபர். ஆகவே எதிரில் ஆட்கள் உள்ளது போலவே நினைத்து, அவர்களுக்கான ரியாக்சன்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியில் எல்லாம் சேரன் சார் மிகப் பெரிய பர்பாமென்ஸ் கொடுத்து நடித்துள்ளார். இந்த காட்சிகளில் எல்லாம் அவர் சிங்கிள் டேக்கில் நடித்து இருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய விஷயம்.

இந்த படத்தில் நடிப்பதற்கு தயங்கிய இர்பானையும் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். இப்போது நீங்கள் மேடையில் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிற இர்பானை இந்த படம் வெளியான பிறகு வெளியே பார்த்தால் தெறித்து ஓடும் அளவிற்கு இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நாயகி சிருஷ்டி டாங்கே நடித்திருப்பது மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரம். படத்தில் விட்டுவிட்டு அவ்வப்போது காட்சிகளில் வந்தாலும் எந்த காட்சிகளில் சிருஷ்டி டாங்கே வருவார் என்று நம்மால் யூகிக்க முடியாது. இந்தப் படத்தில் அவர் நடித்த ஒரு காட்சியை இதுவரை நீங்கள் வேறு எந்த சினிமாவிலும் பார்த்திருக்க முடியாது.. சினிமாவுக்காக எந்தவித சீட்டிங்கும் அந்த காட்சியில் கிடையாது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் வினோத் யஜமான்யாவை நான் இந்த படத்தின் மிக்ஸிங்கின்போதுதான் முதன் முறையாக நேரில் பார்த்தேன்.. பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.. படத்தில் எனது இயக்கத்தைவிடவும் பின்னணி இசைதான் பெரிய அளவில் பேசப்படும்…” என்றார்.

SDC நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் உஸ்மான் பஹீத் இந்தப் படத்தை அடுத்த மாதம் வெளியிடுகிறார்.

Our Score