ஏற்கெனவே இணையத்தில் ‘தல’ அஜீத் ரசிகர்களுக்கும், ‘இளைய தளபதி’ விஜய்யின் ரசிகர்களுக்கும் ஏழாம் பொரு்ததம்.
தி.மு.க., அ.தி.மு.க. போல இருவரில் ஒருவரின் படம் ரிலீஸாகும்போதெல்லாம், இந்த சட்டாம்பிள்ளைகளின் சதிராட்டம் இணையத்தை கலக்கியெடுக்கும்.
இன்றைய ‘புலி’ திரைப்படத்தின் ரிலீஸையொட்டி நேற்றிலிருந்தே ‘தல’யின் ரசிகர்கள் கீபோர்டை தூசி தட்டி தயாராகவே வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தீனி போடுமளவுக்கு ‘புலி’ படத்தின் தன்மை பற்றி வெளியில் செய்திகள் கசிய.. இப்போதுவரையிலும் இதுதான் இணையத்தில் ரங்கராட்டினம் ஆடி வருகிறது.
இந்த நேரத்தில் ‘புலி’ படம் தொடர்பான வேறொரு விஷயமும் வெளியாகி இரு தரப்பினரையுமே சற்று யோசிக்க வைத்திருக்கிறது..!
‘புலி’ படத்தின் முக்கிய கேந்திரமான ஸ்ரீதேவியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தின் பெயர் ‘வேதாளக் கோட்டை’. இந்தக் கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் ‘வேதாள’ மக்கள். படத்தில் விஜய்யும் இந்த வேதாள மக்களில் ஒருவனாகத்தான் நடித்திருக்கிறார்.
படத்தின் வசனங்களில் பெரும்பாலும் வேதாளத்தை மையமாகவே வைத்தே பேசிப்பட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு விஜய்யே ஒரு காட்சியில் நடிகர் சம்பத்ராமிடம் ‘நீங்க வேதாளம்ன்னா நான் பாதாளம்ண்ணே..’ என்கிறார். மேலும் இன்னொரு இடத்தில் ‘வேதாள இனத்தையே அடியோட அழிச்சர்றேன்’ என்றும் சொல்கிறார்.
இப்படி ரீல் பை ரீல் ‘வேதாளம்’ என்கிற பெயரை பயன்படுத்தியே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.
இங்கேதான் ஒரு விஷயம் இடிக்கிறது. ‘தல’ அஜீத் நடிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு ‘வேதாளம்’ என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் பெயர் பொரு்ததம் எப்படி அமைந்தது என்றே தெரியவில்லை..
‘கோ இன்சிடென்ட்’ என்றுகூடஇதைச் சொல்ல முடியாது. ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான சிந்தனை இரண்டு இயக்குநர்களுக்கும் வந்திருக்குமே என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
ஆனால் எல்லாம் தெரிந்துதான் ‘வேதாளம்’ என்று பெயர் வைத்திருப்பார்கள் என்கிறார்கள் சில சினிமா ஜோஸியர்கள். ‘புலி’ படத்தின் டப்பிங்கின்போதோ அல்லது வேறு பின் பணிகளின்போதோ இந்தப் பெயர் லீக்காகி எதிர்த் தரப்பினர் காதுகளுக்குப் போய் வீம்புக்காகவே அவர்கள் அதை தேர்வு செய்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த ‘வேதாள கோட்டை’ வசனங்களுக்கு அந்த ‘வேதாள’த்தில் என்ன பதில் வசனம் கிடைக்கப் போகிறதோ.. தெரியவில்லை.. நிச்சயம் ‘ஏதாவது’ இருக்கும் என்பது கோடம்பாக்கத்து அனுமானம்..!
காத்திருப்போம்..!!!