full screen background image

சினிமா விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் டி.சிவா விடுத்த எச்சரிக்கை..!

சினிமா விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் டி.சிவா விடுத்த எச்சரிக்கை..!

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏ.கே. இயக்கத்தில் நாயகன் துருவா, நாயகி இந்துஜாவின்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவரா தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவும் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது “சினிமா விமர்சகர்கள் கொஞ்சம் நாகரிகத்துடன் விமர்சனம் செய்ய வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.

20190713170337_IMG_7879

டி.சிவா மேலும் பேசும்போது, “இந்த ‘சூப்பர் டூப்பர்’ திரைப்படம் ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். இப்போதெல்லாம் குறும் பட உலகத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள். சமீபத்தில் ஒரு போட்டிக்காக ஏழு குறும் படங்கள் பார்த்தேன். அதில் ஒருவர் பிரமாதமாக நடித்திருந்தார். அவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த நடிகராக வருவார் என்று இப்போதே அடித்துச் சொல்கிறேன்.

ஒரு விஷயத்தை இங்கே நான் பதிவு செய்தாக வேண்டும். சினிமா விமர்சகர்கள் பற்றி நான் ஊடகங்களில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் இங்கே  விளக்கம் தர வேண்டி உள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் எப்போதுமே விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். ஒருபோதும் தயாரிப்பாளர்கள்  விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. ஆனால், தரக் குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம்.

படங்களை மோசமாக விமர்சனம் செய்த நிலையிலும் அவைகள் ஓடி இருக்கின்றன. பல திரைப்படங்கள் இதனாலேயே தோல்வியைத் தழுவியிருக்கின்றன. விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும். அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லையை மீறிப் போகக் கூடாது.

இயக்குநர் என்ன படம் எடுத்திருக்கிறார்..? தியேட்டருக்குப் போகாதீர்கள்… என்றெல்லாம் கேவலமாகப் விமர்சனம் செய்யக் கூடாது.

தி.நகரில் ஒரு துணிக் கடை வாசலில் நின்று கொண்டு  “இந்தக் கடையில் பொருள் வாங்காதே.. எதுவும் எடுக்காதே” என்று கூறினால் என்னாகும்..? அவர் அந்த நேரம் எந்தச் சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள்.

சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல. படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். எப்போதும் முதல் நாள் முதல் ஷோவிலேயே  வெற்றி தெரிவதில்லை. பெறுவதில்லை. ரசிகர்கள் சினிமாவைப் பார்க்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். 

விமர்சனங்களால் ஓடிய படங்கள் நிறைய உண்டு. தரக் குறைவான விமர்சனங்களால் ஓடாத நல்ல படங்களும் உண்டு. விமர்சனம் என்கிற பெயரில் சிலர் செய்யும் இந்த செயல்களால் நாங்கள் பெரிதும் வருத்தப்படுகிறோம். நாங்கள் அனைவரையும் சொல்லவில்லை. ஒரு நான்கைந்து பேர் மட்டுமே இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் சொல்கிறேன். இது எல்லை மீறிச் சென்றால் நிச்சயமாக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம் என்று  எச்சரிக்கிறோம்..” என்றார் டி.சிவா.

Our Score