ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏ.கே.வின் இயக்கத்தில் நாயகன் துருவா, மற்றும் நாயகி இந்துஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் ஏ.கே., நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதி ரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவாகரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத் தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற ஏ.கே. பேசும்போது, “இது எனது 15 ஆண்டு காலக் கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி, கஷ்டப்படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால் படம் அப்படியே இருக்கக் கூடாது என்று யோசித்தோம். பலவித வண்ணங்களையும், வாசனைகளையும் கலந்து இதை வேறு வகையான படமாக உருவாக்கி இருக்கிறோம்.
இதில் பலரது உழைப்பு இருக்கிறது. ஒரு புதிய படக் குழு செய்துள்ள புதிய முயற்சி இது. ஊடகங்கள் எங்களுக்கு பெரிய ஆதரவினை தர வேண்டும்.
பொதுவாகக் கண்டிப்பவர்களை யாருக்கும் பிடிக்காது.. அப்பாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. ஆனால் ஊடகங்கள்தான் நம்மைக் உரிமையோடு கண்டிக்கிறபோதும் நமக்கு நண்பர்களாக இருப்பவர்கள். இப்படத்திற்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.
ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது, “இந்த மேடையில் நான் நிற்பதற்கு பல மனிதர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இப்படத்தின் போது பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் . ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு வந்துள்ளது. இதில் பலரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்…” என்றார்.
இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜா பேசும்போது, “ஐந்தாண்டு பயணத்தில் வந்த படம் இது. நான் ஐ.டி.யில் வேலை பார்த்து வந்தேன். வாய்ப்புக்கான போராட்டத்தில் முடியாமல் மீண்டும் திரும்பிச் சென்று சென்று விடலாம் என்று இருந்தவன். என்னை ஏ.கே.தான் பிடித்து இழுத்து மீண்டும் அழைத்து வந்தார். குறும்பட முயற்சிகள் என்று செய்தோம். அது இந்த படம்வரையிலும் வந்து இருக்கிறது…” என்றார்.
நாயகன் துருவா பேசும்போது, “இயக்குநர் ஏ.கே. ஒன்மேன் ஷோவாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90-களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா. இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா, ஆதித்யா இருவரும் நல்ல பெயரைப் பெறுவார்கள்.
ஒரு படத்திற்குக் கதைதான் முக்கியம் என்றாலும் விநியோகம் மிக முக்கியம் என்று இப்போது மாறியிருக்கிறது. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை. வெற்றிப் படம், தோல்விப் படம் என்று மட்டுமே பேசப்படுகிறது. பத்திரிகையாளர்கள் தயவு செய்து இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்று கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் பேசும்போது, “இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லரைப் பார்க்கும்போது யார் ஒளிப்பதிவாளர்.. யார் இசையமைப்பாளர்.. என்று தேடிப் பிடித்துப் பாராட்டத் தோன்றியது.
இன்று சினிமா எடுக்கும்போது அதன் வியாபார சாத்தியங்களை, வெளியீட்டு விஷயங்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு உதவ நானும் தயார். அனுபவமுள்ள மூத்த தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்…” என்றார்.
நாயகி இந்துஜா பேசும்போது, “இந்தப் படக் குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறும்படக் கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள்…” என்றார்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, “இந்த விழாவிற்கு என்னை நாயகன் துருவா, இயக்குநர் ஏ.கே., இசையமைப்பாளர் திவாகர் ஆகியோர் நேரில் வந்து அழைத்தார்கள்.
நானும் குறும்பட உலகத்திலிருந்து பெரும் படத்துக்கு பல கனவோடு வந்தவன். அப்போது எனக்குப் பழைய நினைவுகள் வந்தன. நிகழ்ச்சிக்கு இங்கே வந்துள்ள இந்த டி.சிவா சார் அன்று என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இங்கிருக்கிறார். எனக்குத் தொழில் நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கிய ஜே.எஸ்.கே.சதீஷ் சார் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .
இந்தப் படக் குழுவினரைப் பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அதில் இருக்கும் என நம்புகிறேன். படத்தை எனக்குப் பிடித்திருந்தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்.
நான் பெரும்பாலும் புதுவித படக் குழுவுடன்தான் பணியாற்றுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே உள்ள சினிமா வெளியீடு மற்றும் வியாபார விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது. அது புரிவதற்கு ஏழு வருடங்களானது.
நேற்று வெளியான ‘கூர்கா’ படத்தை நான்தான் வெளியிட்டுள்ளேன். பெரிய விலை கொடுத்துவிட்டதாக பலரும் சொன்னார்கள். நான் கதையை மட்டும் பார்த்தேன். இப்போது படமும் வெற்றிகரமாக ஓடுகிறது.
ஒரு படத்தை உருவாக்க நினைக்கும்போது கிடைக்கும் தோல்வியில் இருந்து எழுந்து போராடி கிடைக்கும் வெற்றி, அளவில் பெரியதாக இருக்கும்…” என்றார்.