மலேசியாவில் தயாரான ‘பூசாண்டி வரான்’ படம் தமிழ்நாட்டுக்கும் வருகிறது..!
ட்ரையம் ஸ்டுடியோ என்ற மலேசிய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆண்டி தயாரித்துள்ள படம் ‘பூச்சாண்டி’.
இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகிய மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர்களே நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, படத் தொகுப்பு செய்து, இயக்கியிருக்கிறார் J.K.விக்கி.
வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மைச் சம்பவங்களின் பின்னணியோடு த்ரில்லர் டைப்பில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த ஜனவரி 27-ம் தேதி மலேசியாவில் ‘பூச்சாண்டி’ என்ற தலைப்பில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் தமிழ்ப் படம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி ‘பூசாண்டி வரான்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது.
இத்திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததைப் போல, தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறது படக் குழு.