குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிப்பில் இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘பேய காணோம்’.
இந்தப் படத்தில் நடிகை மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் மற்றும் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை – மிஸ்டர் கோளாறு, ஒளிப்பதிவு – ராஜ்.O.S,, கௌபாஸு, பிரகாஷ், படத் தொகுப்பு – A.K.நாகராஜ், தயாரிப்பு மேற்பார்வை – உசிலை சிவகுமார், பத்திரிகை தொடர்பு – மணவை புவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செல்வ அன்பரசன்.
வாழ்க்கையில் பணத்தை காணோம்.. குழந்தையை காணோம்… பொருளை காணோம்… நண்பனை காணோம்… இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன்முதலாக இந்தப் படத்தில் வித்தியாசமாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
முழுக்க, முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில்.. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
கோரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம், பல இன்னல்கள், தடைகளை கடந்த நிலையில் தற்போது படப்பிடிப்பினை முடித்துள்ளது. பல சிக்கல்களை கடந்து படப் பணிகள் முடிக்கப்பட்டதை ஒரு வெற்றியாகவும் நினைத்து இந்த விழாவினை படக் குழுவினர் கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் R. சுருளிவேல் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவரின் திறமையை கண்டு நீங்கள் படம் செய்யலாமே எனக் கேட்டேன். நல்ல தயாரிப்பாளர் அமைய வேண்டும் என்றார். நானே தயாரிக்கிறேன் எனக் கூறினேன். அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது.
இயக்குநர் செல்வ அன்பரசன் இப்படத்திற்கு நாயகியாக மீரா மிதுனை தேர்வு செய்யலாம் என்றார். ஆனால் அவர் பற்றி பொதுவில் நல்ல அபிப்ராயங்கள் இல்லை. அதனால் வேண்டாம் என்றேன். ஆனால், இயக்குநர் அவர்தான் பொருத்தமாக இருப்பார். படத்திற்கும் ஒரு பலமாக இருக்கும் என்றார். நானும் சரி என்றேன்.
ஆனால் மீரா மிதுன் வந்ததிலிருந்தே பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். இயக்குநர் மீதே குற்றசாட்டுக்களை கூறினார். ஷீட்டிங்கில் பாதியில் கிளம்பி போய் விடுவார். திடீரென டில்லியில் இருக்கிறேன். விமான டிக்கெட் போட்டால்தான் வருவேன் என்பார். அவர் எங்களுக்கு நிறைய தொல்லைகள் தந்தார்.
முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து அவர் முதல்வர் ஆவதை நான் தடுப்பதாக என் மீதும் குற்றம் சுமத்தினார். படம் பாதி எடுக்கப்பட்டுவிட்டதால் அவரை மாற்ற முடியவில்லை. அவரை போன்ற ஒருவரை வைத்து கொண்டு இப்படத்தின் மீதமான படப்பிடிப்பை முடித்தது மிகப் பெரிய விசயம்.
இப்படத்திற்கு பல தடைகள் வந்தன. அதையெல்லாம் கடந்து இன்று படத்தை முடித்துள்ளோம். அதற்காகத்தான் இந்த வெற்றி விழா. எங்கள் படம் நல்லதொரு காமெடி படமாக வந்துள்ளது.
இப்போது திரையரங்குகளில் சிறு படங்களுக்கு இடம் கிடைப்பதில்லை. ‘விக்ரம்’ படத்திற்கும் என் படத்திற்கும் ஒரே டிக்கெட் விலை என்பது அநியாயம். 50 ரூபாய் டிக்கெட் வைத்தால்தான் என் படத்திற்கு கூட்டம் வரும். இதை தயாரிப்பாளர் சங்கங்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும்..” என்றார்.
இயக்குநர் செல்வ அன்பரசன் பேசும்போது, “என்னிடம் நிறைய அருமையான கதைகள் இருந்தன. ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்தேன். கடவுள் ஆசிர்வாதமாக தயாரிப்பாளர் சுருளிவேலை அனுப்பி எனக்கு வாய்ப்பு தந்தார். தயாரிப்பாளரும் எனக்கு முழு சுதந்திரம் தந்தார்.
நான் செய்த மிகப் பெரிய தவறும், மிகப் பெரிய சரியானதும் நடிகை மீரா மிதுனை நாயகி ஆக்கியதுதான். பேயாக காட்ட மீரா மிதுன் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவருக்கும், எனக்கும் வந்த முதல் நாளே சண்டை. அதன் பிறகு தயாரிப்பாளரிடம் சமாதானம் பேசி ஒழுங்காக ஷூட்டிங் வந்தார். நன்றாகவும் நடித்து கொடுத்தார்.
அதன் பிறகு ஒரு கேஸில் ஜெயிலுக்கு போய் விட்டார். அவர் வெளியே வந்த பிறகு எப்படியோ படத்தை எடுத்து முடித்து விட்டோம். மற்ற நடிகர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.
இந்தப் படம் பல தடைகளை சந்தித்தது ஆனாலும் எங்களை சுற்றி சில நல்ல உள்ளங்கள் இருந்ததால் எங்களால் படத்தை முடிக்க முடிந்தது. வடிவேலு பாணியில் இவ்வளவு அடியும் வாங்கிட்டு உசுரோட இருக்கனே.. எனக்குத்தான் இந்த கப்பு என்பது போல இவ்வளவு பிரச்சினைகளையும் தாண்டி இந்தப் படத்தை முடித்ததே பெரிய சக்சஸ். அதனால்தான் இந்த வெற்றி விழாவை வைத்தோம். இந்தப் படத்தில் நல்ல கதை இருக்கிறது. தியேட்டருக்கு வரும் அனைவரையும் இந்தப் படம் கண்டிப்பாக சிரிக்க வைக்கும். இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள்…” என்றார்.