full screen background image

இளையராஜாவின் பாடல் கேஸட்டுகளை விற்பனை செய்ய நிரந்தரத் தடை..!

இளையராஜாவின் பாடல் கேஸட்டுகளை விற்பனை செய்ய நிரந்தரத் தடை..!

இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்பவும், கேஸட்டில் விற்பனை செய்யவும் 5 தனியார் நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது.

சென்ற ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “நான் கடந்த 1970-ம் ஆண்டு முதல் தென்னிந்திய திரைப்படங்களில் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் தலை சிறந்த இசைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன்.

1993–ம் ஆண்டு லண்டனில் சிம்பொனி இசையமைத்தேன். முழுமையான சிம்பொனி இசையமைத்த முதல் இந்தியன் நான்தான். இசைக்காக 4 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளேன்.

நான் 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன். திரைப்பாடல், பக்தி பாடல் என்று 4,500–க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ‘மெட்டு’க்களை அமைத்துள்ளேன்.

நான் இசையமைத்த பாடல்களை ஒலிபரப்ப இதுவரையிலும் யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை.

ஆனால், என்னுடைய அறியாமையை பயன்படுத்தி, அகி மியூஸிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய 5 நிறுவனங்கள் என்னுடைய அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3–வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக கடந்த ஆண்டு என்னுடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் போலீசில் புகாரும் செய்துள்ளனர்.

எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை கேசட்டில் விற்பனை செய்து, ஒலிப்பரப்புகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும்…” என்று கேட்டிருந்தார்.

இந்த மனு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்பவும், கேசட்டில் விற்பனை செய்யவும் அகி மியூஸிக் நிறுவனம் உட்பட 5 நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து  நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்பவும், விற்பனை செய்யவும் மேற்கண்ட 5 நிறுவனங்களுக்கும் நிரந்தர தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு இசைஞானி இளையராஜா பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் தான் இதுவரையில் இசையமைத்த அனைத்து பாடல்கள், இசையின் உரிமைகளை அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கே வழங்கவிருக்கும் செய்தியைத் தெரிவிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது..!

Our Score